பி.சி.சி.ஐ., புதிய முடிவு

மும்பை: இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் 'ரிவியூ' கூட்டம் மும்பையில் நடந்தது. இந்திய டெஸ்ட், ஒருநாள் அணி கேப்டன் சுப்மன் கில், 'டி-20' அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், பயிற்சியாளர் காம்பிர், கிரிக்கெட் தலைமை அதிகாரி லட்சுமண் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதுகுறித்து பி.சி.சி.ஐ., செயலர் தேவஜித் சைக்கியா கூறியது:
பி.சி.சி.ஐ., செயல்பாடுகள் சிறப்பாக சென்று கொண்டுள்ளன. ஆண்கள், பெண்கள் அணிகள், பயிற்சியாளர்கள், காயம் தொடர்பான தகவல்கள் பகிரும் குழு இடையே சரியான ஒருங்கிணைப்பு உள்ளன.
மற்றபடி இந்திய அணிக்கு அதிகமான போட்டிகள் உள்ளது தான் சவாலாக உள்ளது. இதனால் போட்டி அட்டவணை குறித்து சில முடிவுகள் எடுக்க உள்ளோம். தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடுவதற்கு முன், வீரர்களுக்கு தேவையான ஓய்வு, பயிற்சி போட்டிகள் இடம் பெறும் வகையில் அட்டவணை அமைக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளோம்.
அயர்லாந்து, இங்கிலாந்து தொடர் குறித்து விவாதிக்கப்பட்டது. 2027 உலக கோப்பையில் சிறப்பாக செயல்படுவது குறித்தும் பல்வேறு முடிவுகள் எடுக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement