தைராய்டு சுரப்பியில் புற்றுநோய் கட்டி 'காவேரி'யில் பெண்ணுக்கு மறுவாழ்வு

சென்னை: தைராய்டு சுரப்பியில் இருந்த புற்றுநோய் கட்டியை, ரோபோட்டிக் அறுவை சிகிச்சை வழியே அகற்றி, 50 வயது பெண்ணுக்கு, காவேரி மருத்துவமனை மருத்துவர்கள், மறுவாழ்வு அளித்துள்ளனர்.

மேற்கு வங்க மாநிலம், கொல்கட்டாவைச் சேர்ந்த 50 வயது பெண்ணுக்கு, கழுத்து பகுதியில் வீக்கம் இருந்தது. பரிசோதனையில், தைராய்டு சுரப்பியில் உருவாகும் 'பாபில்லரி' எனும் புற்றுநோய் கட்டி என்பது உறுதியானது.

இதையடுத்து, வட பழனி காவேரி மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். பரிசோதனையில், அவரது தைராய்டு சுரப்பியின் இடது பக்கத்தில் இருந்த கட்டி, அதை சுற்றியுள்ள தசைகளுடன் ஒட்டியிருப்பது தெரிந்தது. குரல் எழுப்ப காரணமான நரம்புக்கு மிக நெருக்கமாகவும் இருந்தது.

தொடர்ந்து, அறுவை சிகிச்சை நிபுணர் சதீஷ்குமார் ஆனந்தன் தலைமையிலான மருத்துவக் குழுவினர், ரோபோடிக் அறுவை சிகிச்சையை முறையில், பாதிக்கப்பட்ட தசைகளுடன் சேர்த்து, முழு தைராய்டு சுரப்பி கட்டியை அகற்றினர்.

மருத்துவமனை குழும இணை நிறுவனர் அரவிந்தன் செல்வராஜ், டாக்டர் சதீஷ்குமார் ஆகியோர் கூறியதாவது:

வழக்கமான முறையில் கட்டியை அகற்ற, கழுத்தின் முன் பகுதியில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.

இதனால் பெரிய தழும்பு ஏற்படும். இதை தவிர்க்கவே, அக்குளில் சிறிய துளையிட்டு, சுரங்கம் போன்ற பாதையை உருவாக்கி கட்டியை அகற்றினோம்.

ரோபோடிக் அமைப்பின் துல்லியத்தன்மை, கட்டியையும் குரலுக்குக் காரணமான நரம்பையும் தெளிவாக வேறுபடுத்தி, சிகிச்சை அளிக்க முடிந்தது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement