9 பதக்கம் வென்றது தமிழகம் * தேசிய யூத் தடகளத்தில்...
லுாதியானா: தேசிய யூத் தடகளத்தில் 2 தங்கம் உட்பட மொத்தம் 9 பதக்கம் வென்றது தமிழகம்.
பஞ்சாப், லுாதியானாவில் 21வது தேசிய யூத் தடகள சாம்பியன்ஷிப் (18 வயதுக்கு உட்பட்டோர்) நடந்தது. மூன்று நாள் நடந்த இப்போட்டியில் தமிழகம் சார்பில் 21 வீரர்கள், 16 வீராங்கனைகள் என 37 பேர் பங்கேற்றனர். 100 மீ., ஓட்டத்தில் தமிழகத்தின் சாம்ராஜ் (10.46 வினாடி), மிர்த்திகா (11.78 வினாடி) தங்கம் கைப்பற்றினர்.
நேற்று கடைசி நாளில் 14 பிரிவுகளில் பைனல் நடந்தன. பெண்களுக்கான 200 மீ., ஓட்டத்தில் தமிழகத்தில் சகாய ஜெமிமா, 24.54 வினாடி நேரத்தில் வந்து வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். இத்தொடரில் இவர் வென்ற இரண்டாவது பதக்கம் இது. முன்னதாக, 400 மீ., ஓட்டத்தில் வெண்கலம் வென்றிருந்தார்.
பெண்களுக்கான 100 மீ., தடை ஓட்டத்தில் தமிழகத்தின் ராஜஸ்ரீ, 14.23 வினாடி நேரத்தில் ஓடி, வெள்ளிப்பதக்கம் வென்றார். பெண்களுக்கான நீளம் தாண்டுதலில் தமிழகத்தின் மிருனிஷா, 5.69 மீ., தாண்ட, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
ஆண்கள் உயரம் தாண்டுதலில் தமிழகத்தின் சக்திவேல் (2.07 மீ.,), 110 மீ., தடை ஓட்டத்தில் கிரிபால் கார்த்திக் வெண்கலப் பதக்கம் வசப்படுத்தினர்.
ஒட்டுமொத்தமாக தமிழக அணி 2 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம் என 9 பதக்கம் கைப்பற்றியது. பதக்க பட்டியலில் 4 வது இடம் பெற்றது. ஹரியானா (14) முதல் இடம் பிடித்தது.