பெரு வெள்ளத்தால் நேபாளத்திற்கு ரூ.24,250 கோடி இழப்பு

3


காத்மாண்டு: கடந்த வாரம் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் நேபாளத்திற்கு ரூ.24,250 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் தர்மராஜ் உப்ரேதி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளத்தால் ரசுவா மாவட்டம் உள்பட பல்வேறு பகுதிகள் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள வீடுகள் உள்பட உயர்ந்த கட்டடங்களை வெள்ள நீர் முழுமையாக சூறையாடி விட்டது. சாலைகள், மேம்பாலங்கள் என அனைத்து உள்கட்டமைப்புகளும் சேதமடைந்து விட்டன. இந்த வெள்ளத்திற்கு இதுவரையில் 1,250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில், நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கில் குறைந்தபட்சம் ரூ.24,250 கோடி மதிப்புள்ள சொத்துக்கள், வீடுகள் மற்றும் உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் தர்மராஜ் உப்ரேதி தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது; முதல் நான்கு மாத கால ஆரம்ப மீட்புப் பணிகளில், சாலைகள் மற்றும் தற்காலிக முகாம்களைக் கட்டுவது, குடிநீர் வழங்குவது மற்றும் மின்சாரத்தை மீட்டமைப்பது போன்றவற்றுக்கான தோராயமான செலவு ரூ.5,000 கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தோராயமாக 20,000 வீடுகள் வரை மறுசீரமைக்கப்பட வேண்டியிருக்கும். அவற்றில் குறைந்தபட்சம் 7,500 வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. பல்வேறு நிறுவனங்கள், துறைகளுடன் ஒருங்கிணைந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்தத் தொகை மதிப்பிடப்பட்டுள்ளது. விரிவான மதிப்பீட்டு அறிக்கை விரைவில் வெளியிடப்படும், இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement