நவம்பர் 10ல் வெளியாகிறது சோனியாவின் சுயசரிதை புத்தகம்; ஒப்புக்கொண்டது அமெரிக்க நிறுவனம்

34

புதுடில்லி: பெங்குயின் இந்தியா நிறுவனம் பின்வாங்கியதைத் தொடர்ந்து, சோனியாவின் சுயசரிதை புத்தகத்தை, வரும் நவம்பர் 10ல் அமெரிக்காவின் ஹார்பர் காலின்ஸ் பதிப்பக நிறுவனம் வெளியிடுவதாக அறிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜிவின் மனைவியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சோனியா, 79, தன் வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதியுள்ளார். 'பிலாங்கிங்: எ ஜர்னி ஆப் லவ்' என்ற பெயரில் 544 பக்கத்திற்கு தயாராகும் புத்தகத்தை சர்வதேச அளவில், 'பென்குயின் ரேண்டம் ஹவுஸ்' நிறுவனத்தின் ஒரு பிரிவான 'ஆல்பிரட் ஏ நாப்' வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து திடீரென , 'சோனியாவின் புத்தகத்தை வெளியிட நாங்கள் தயாராக இருந்தோம். ஆனால், இந்தியாவில் அந்த புத்தகத்தை நாங்கள் வெளியிடவில்லை' என, 'பென்குயின் இந்தியா' நிறுவனம் அறிவித்துவிட்டது. புத்தகத்தில் சில மாற்றங்களைச் செய்து, சில பகுதிகளை நீக்குமாறு பதிப்பகம் சார்பில் வைத்த கோரிக்கையை சோனியா ஏற்க மறுத்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இந்த புத்தகத்தை நவம்பர் 10ல் அமெரிக்காவின் நியூயார்க் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஹார்பர் காலின்ஸ் பதிப்பக நிறுவனம் வெளியிடுவதாக அறிவித்துள்ளது. இது குறித்து அந்நிறுவனம் சமூக வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அந்த பதிவில் கூறியிருப்பதாவது: சோனியா எழுதிய 'பிலாங்கிங்: ஏ ஜர்னி ஆப் லவ்' என்ற நூலை ஹார்பர் காலின்ஸ் நிறுவனம் இந்தியாவில் வெளியிட உள்ளது. நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த சுயசரிதை புத்தகம், வரும் நவம்பர் 10ம் தேதி இந்தியாவில் வெளியிடுவோம் என தெரிவித்துள்ளது.

Advertisement