அரசு மருத்துவமனைக்கு அவசர தேவை ஜெனரேட்டர் வசதியே மாநகராட்சிக்கு கோரிக்கை

திருப்பரங்குன்றம்: ‘‘திருப்பரங்குன்றம் அரசு ஆஸ்பத்திரிக்கு உடனே ஜெனரேட்டர் வசதி ஏற்படுத்தித் தரவேண்டும்’’ என தி.மு.க., கவுன்சிலர் சிவசக்தி ரமேஷ் மாநகராட்சி உதவி கமிஷனரிடம் மனு அளித்தார்.

திருப்பரங்குன்றம் பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இரவு நேரம் 2 – 3 மணி நேரம் முன்னறிவிப்பு இன்றி மின்தடை ஏற்படுகிறது. இந்நிலையில் கவுன்சிலர் சிவசக்தி ரமேஷ், மாநகராட்சி உதவி கமிஷனரிடம் அளித்துள்ள மனு:

திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனைக்கு தினமும் நுாற்றுக் கணக்கான வெளி நோயாளிகள், உள்நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். 24 மணி நேரமும் செயல்படும் இம்மருத்துவமனையில், மகப்பேறு, ஆபரேஷன் போன்றவையும் நடக்கின்றன.

ஜெனரேட்டர் வசதி இன்றி நோயாளிகள், டாக்டர்கள், பணியாளர்கள் சிரமப்படுகின்றனர். சில நாட்களுக்கு முன் இரவில் மின்தடை ஏற்பட்டபோது அலைபேசி, மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் சிகிச்சை அளித்தனர்.

அங்கே ஜெனரேட்டர் வசதி ஏற்படுத்துவது மாநகராட்சியா, மருத்துவமனை நிர்வாகமா என்ற குழப்பத்தில் பணியாளர்கள் உள்ளனர். பொதுமக்கள் நலன் கருதி உடனே ஜெனரேட்டர் வசதி ஏற்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement