டாஸ்மாக் கழிவுகள் தேங்குவதால் விளை நிலம் மலடாகும் அபாயம்

பெரியகுளம், செப். 6

பெரியகுளம் அருகே வடுகபட்டி டாஸ்மாக் கடை முன்பு குவிந்துள்ள பாலித்தீன் கழிவுகளால் சுற்றுச் சூழல் பாதித்து மண் மலடாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பெரியகுளம் வடுகபட்டி ரோட்டில் முக்கரை விநாயகர் கோயில் எதிர்புறம் டாஸ்மாக் பார் வசதியுடன் உள்ளது. இந்த டாஸ்மாக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து வடுகபட்டி பேரூராட்சியில் தீர்மானம் நிறைவேற்றியது. பல்வேறு சமூக நல அமைப்புக்கள் போராட்டம் நடத்தியது. இதையெல்லாம் மீறி இரு ஆண்டுகளுக்கு முன்பு தென்னந்தோப்பில் டாஸ்மாக் திறக்கப்பட்டது. கடையில் மதுபாட்டில் வாங்குபவர்கள், கடை முன்புள்ள தனியார் தோட்டத்திற்குள் நுழைந்து மது குடிக்கின்றனர். அங்கேயே தண்ணீர் பாக்கெட் பாலித்தீன்,நொறுக்கு தீனி பாலித்தீன் பைகள், பாட்டில் மற்றும் கழிவுகளை அங்கேயே வீசி விட்டு செல்கின்றனர்.

நிலத்தடி நீர் பாதிக்கும் நிலை: தோட்டத்து உரிமையாளர்கள் கூறுகையில் ,‘பாலித்தீன் கழிவுகள் தோட்ட பகுதியில் வீசி செல்வதால் சுற்றுப்பகுதி நூறு மீட்டர் தொலைவில் பாலிதீன் கழிவுகள் குவிந்துள்ளன. மழை நீர் பாலித்தீன் கழிவுகள் கடந்து நிலத்திற்குள் செல்வதில்லை. இதனால் சுற்றுச் சூழல் பாதித்து, நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வளமிக்க மண் மலடாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் புலம்புகின்றனர். டாஸ்மாக் கழிவுகளால் மண் வளம் பாதிப்பதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

---

Advertisement