மனதை உலுக்கிய 11 விநாடி வீடியோ... டில்லி கட்டட இடிபாடுகளில் சிக்கியபடி உதவி கேட்ட மாணவன் மீட்பு

புதுடில்லி: டில்லியில் சரிந்து விழுந்த 6 மாடி குடியிருப்பின் இடிபாடுகளில் சிக்கிய மாணவர் ஒருவர், உதவி கேட்டு வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதையடுத்து, அந்த நபர் பத்திரமாக மீட்கப்பட்டார்.

நேற்று மதியம் தென்மேற்கு டில்லியின் சத்யா நிகேதன் பகுதியில் செயல்பட்டு வரும் மாணவர்களுக்கான மாதாந்திர கட்டண விடுதி (PG) இடிந்து விழுந்தது. டில்லியையே உலுக்கிய இந்த சம்பவத்தில் இதுவரையில் 50 மாணவர்கள் வரை சிக்கியிருக்கலாம் என்று சந்தேகிகப்படும் நிலையில், 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இடிபாடுகளில் இன்னும் பலர் சிக்கியிருப்பதாகவும், அதில் சிலர் உதவி கேட்டு அழைப்பு விடுத்ததாகவும் பாஜ எம்எல்ஏ அனில் நேற்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கிய ஏஆர்எஸ்டி கல்லூரியில் பி.காம். முதலாமாண்டு பயின்று வரும் பீஹாரைச் சேர்ந்த மாணவர் ஆதித்யா, தனது முகத்தில் ரத்தம் வழிந்து கொண்டிருக்கும் நிலையில், உதவி கேட்டு 11 விநாடி வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் மீது கான்கிரீட் கற்கள் கிடக்கின்றன. அசைய முடியாத நிலையிலும் கூட, அவர் தன்னுடைய செல்போன் மூலம் கைகளை மட்டும் அசைத்து இந்த வீடியோ பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவை தன்னுடைய நண்பர்களுக்கு அனுப்பி உதவி கேட்டுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைப்பக்கத்தில் பகிர்ந்துள்ள மாணவர் அமைப்பு, உடனடியாக அவரை மீட்குமாறு வலியுறுத்தியது. இதையடுத்து, தொடர்ந்து நடைபெற்ற மீட்பு பணிகளால் அந்த மாணவன் உயிருடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement