புதுச்சேரி காக்கிகளின் சபாரி பஞ்சாயத்து ஒரே டிபார்ட்மென்ட்... இரண்டு டிரெஸ் கோடு

புதுச்சேரியில் வி.ஐ.பி., செக்யூரிட்டி என்றாலே கண்முன்னே வந்து நிற்பது ‘சிக்மா செக்யூரிட்டி’ படைதான்.

ராஜ் நிவாஸ், கவர்னர் மாளிகை, சட்டசபை, பிரெஞ்சு துாதரகம்னு நகரின் அதிமுக்கிய மையங்களை தங்கள் கண்காணிப்பில் வைத்திருக்கும் இந்த ஸ்பெஷல் டீம், புதுச்சேரிக்கு வரும் வெளிமாநில வி.ஐ.பி-க்களுக்கும் சரி, ஊருக்குள் வலம்வரும் உள்ளூர் பிரமுகர்களுக்கும் சரி... 24 மணி நேரமும் ‘நிழல்’ போல உடனிருந்து பாதுகாப்பு அரணாக இருக்கின்றனர்.

இவர்களுக்கு வழக்கமான காக்கி சீருடை கிடையாது; சிவில் உடைகள்தான். ஆனால், சமீபகாலமாக இந்த பிரிவுக்குள் ஒரு அமைதியான, அதேசமயம் காரசாரமான ‘சீருடைப் போர்’ புகையத் தொடங்கியிருக்கிறது. 

காரணம் ஒரே ஒரு சபாரி உத்தரவு. சிக்மா செக்யூரிட்டியில் பணிபுரியும் எஸ்.ஐ-க்களும் ஏட்டுகளும் கட்டாயமாக சபாரி உடைதான் அணிய வேண்டும் என்பதுதான் அந்த மேலிடத்து உத்தரவு. பிரச்னை உத்தரவில் இல்லை. அதை நடைமுறைப்படுத்துவதில் காட்டும் ‘இரட்டை நிலைக் கோட்டில்’தான் இருக்கிறது.

இந்த உத்தரவைப் பிறப்பித்த உயர் அதிகாரிகளோ அல்லது அவர்களுக்கு அடுத்து இருக்கும் இன்ஸ்பெக்டர்களோ யாரும் இந்த சபாரி ஆடையை அணிவதில்லை. ஆனால், களத்தில் நின்று சுழன்று வேலை செய்யும் எஸ்.ஐ-க்களும் ஏட்டுகளும் மட்டும் கண்டிப்பாக சபாரி போட்டே ஆக வேண்டும் என்ற கட்டாயம்.

சட்டம், ஒழுங்கு, சீருடை விதிமுறைகள் எல்லாமே டிபார்ட்மென்ட்டில் உள்ள அனைவருக்கும் ஒன்று தானே? அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு விலக்கு, ஓடியாடி உழைப்பவர்களுக்கு மட்டும் கெடுபிடியா? – இதுதான் கீழ்நிலை அதிகாரிகளின் மனதில் நெருப்பாக குமுறிவிட்டு எறிகிறது..

ஆர்டர் போடுற அதிகாரிகளுக்கு இல்லாத கட்டுப்பாடு, அதை அமல்படுத்துற எங்களுக்கு மட்டும் தானாங்ற கேள்வி, இப்போ புதுச்சேரி போலீஸ் வட்டாரத்துல காரசாரமான விவாதமா மாறியிருக்கு. சரி... இந்த சபாரி பஞ்சாயத்தும், கீழ்மட்ட போலீஸாரின் இந்த மனக்குமுறலும் நம்ம டி.ஜி.பி., காதுக்கு எட்டிடுச்சா... இல்லையா?

Advertisement