புதிய உச்சத்தை எட்டிய இந்தியா-பிரான்ஸ் உறவுகள்; பாரிஸ் கோவில் திறப்பு விழாவில் மோடி பெருமிதம்

2


புதுடில்லி: இந்தியா-பிரான்ஸ் உறவுகள் புதிய உச்சத்தை எட்டியுள்ளன என பாரிஸ் கோவில் திறப்பு விழாவில் பிரதமர் மோடி பேசுகையில் தெரிவித்தார்.

பிரான்சின் பாரிஸில் உள்ள சுவாமிநாராயண் கோவில் திறப்பு விழாவில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியாவும், பிரான்சும் வலுவான உறவை உருவாக்கி வருகிறது. சுவாமிநாராயண் கோவில் கலாசார உறவுகளை வலுப்படுத்தும், கைவினைத்திறனைப் பிரதிபலிக்கும்; இந்தியா-பிரான்ஸ் உறவுகள் புதிய உச்சத்தை எட்டியுள்ளன. நீண்டகால கலாசார மற்றும் அரசியல் உறவுகளின் அடிப்படையில் அமைந்துள்ளது; இது மிகவும் சிறப்பு வாய்ந்தது.


முன்னேற்றம்




எனது நண்பரான அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உடன் இணைந்து, இரு நாடுகளும் வலுவான நட்புறவை கட்டமைத்து வருகின்றன. தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, பாதுகாப்பு முதல் விண்வெளி மற்றும் பருவநிலை மாற்ற நடவடிக்கைகள் வரை, இந்தியாவும் பிரான்சும் புதிய உத்வேகத்துடனும் ஆற்றலுடனும் இணைந்து பணியாற்றி முன்னேற்றம் கண்டு வருகின்றன. நாங்கள் 2026ம் ஆண்டை இந்தியா-பிரான்ஸ் புத்தாக்க ஆண்டாக கொண்டாடுகிறோம்.

பிரான்சில் இந்திய வீரர்கள் செய்த தியாகம், இன்றளவும் மக்களின் இதயங்களில் நிலைத்திருக்கிறது என்பதற்கு வரலாறு சாட்சியாக நிற்கிறது. சமஸ்கிருதத்தைப் பிரபலப்படுத்துவதில் பிரெஞ்சு அறிஞர்கள் ஆற்றிய முக்கியப் பங்கை மொழி ஆர்வலர்களும் அறிவார்கள். இன்று, யோகா நமது நாடுகளுக்கு இடையே மக்கள் தொடர்புகளுக்கான ஒரு பாலமாகவும் மாறியுள்ளது. சர்வதேச யோகா தினத்தன்று ஈபிள் கோபுரத்திலிருந்து எடுக்கப்பட்ட படங்கள், பிரான்சில் யோகாவின் மகத்தான பிரபலத்தைப் பிரதிபலித்தன.


கலாசார உறவு




எதிர்காலத்தில் நேரம் கிடைக்கும்போதெல்லாம், நிச்சயமாகக் கோவிலுக்குச் சென்று மரியாதை செலுத்த முயற்சிப்பேன்; தற்போது, ​​இந்த பிரம்மாண்டமான சுவாமிநாராயண் கோவில் நமது கலாசார உறவுகளில் மற்றுமொரு மைல்கல்; பிரான்சில் இன்று ஒரு பிரம்மாண்டமான கோவில் தயாராகி உள்ளது. அது பிரான்சின் பன்முகத்தன்மையை வளப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இந்தியாவுக்கும் பிரான்சுக்கும் இடையிலான கலாசார உறவுகளுக்கும் புத்துணர்ச்சி அளிக்கும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Advertisement