வார சந்தை குத்தகை ஏலம் ஆன்லைனில் விட முடிவு

நெல்லிக்குப்பம்: காராமணிக்குப்பம் வார சந்தையில் குத்தகை விடுவதற்கான ஏலம் இந்த ஆண்டு ஆன்லைனில் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பத்தில், சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான 5 ஏக்கர் இடம் கடலுார் – பண்ருட்டி சாலையையொட்டி, சந்தைக்கான இடம் உள்ளது. இங்கு வாரம்தோறும் திங்கட்கிழமைகளில் சந்தை நடைபெறும்.

சந்தையில் கடைபோடும் வியாபாரிகளிடம் கட்டணம் வசூலிக்க தனியாருக்கு ஆண்டுதோறும் ஜூலை 1ம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜூ 30ம் தேதி வரைக்கான குத்தகை விடப்படும்.

கடந்த ஆண்டு 11 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. இந்த குத்தகை காலம் கடந்த ஜூன் 30ம் தேதியுடன் முடிந்து. ஜூலை ஏலம் விடப்பட வேண்டும். ஆனால், இதுவரை குத்தகைக்கான ஏலம் விடப்படவில்லை.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘நேரடி ஏலத்தில் தவறுகள் நடப்பதாக புகார் எழுந்ததால் இந்த ஆண்டு ஆன்லைன் மூலம் ஏலம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், ஏலம் நடத்த வேண்டாம் என உயரதிகாரிகள் கூறியதால் ஏலம் விடவில்லை.

பழைய ஏலதாரரிடமே பழைய ஏலத்தொகையை கணக்கில் கொண்டு கட்டணம் வசூலிக்கின்றோம். விரைவில் ஆன்லைன் மூலம் ஏலம் நடைபெறும்’ என்றார்.

Advertisement