சிவகங்கை மாவட்டத்தில் பண மோசடி அதிகரிப்பு: மக்கள் விழிப்புடன் இருக்க எச்சரிக்கை

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ஆன்லைன் மோசடி, பணம் இரட்டிப்பு மோசடியில் தினமும் பலர் பல லட்சங்களை இழந்து வருவதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க போலீசார் எச்சரித்து வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டத்தில் ஆன்லைன் முதலீடு, டிஜிட்டல் அரெஸ்ட், பங்கு மார்க்கெட் முதலீடு என பலவிதமான மோசடிகளால் மக்கள் பலர் ஏமாற்றப்படுகின்றனர்.

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், பெண்கள், வேலை தேடும் இளைஞர்களை குறிவைத்து ஆன்லைன் மோசடியில் ஈடுபடுகின்றனர். இதனால் மாவட்டத்தில் சைபர் கிரைம் போலீசுக்கு வரும் புகார்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் மாவட்டத்தில் புதிதாக பணம் இரட்டிப்பாக தருகிறோம் என்று ஒரு கும்பல் எப்.கியூ.எல்., என்ற செயலியில் பொதுமக்களை முதலீடு செய்ய வைத்து ரூ.1.08 லட்சம் முதலீடு செய்தால் 45 நாட்களில் பணம் இரட்டிப்பாக கிடைக்கும் என்ற வார்த்தையை நம்பி மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் 1000க்கும் மேற்பட்டோர் தங்கள் பெயரிலும் தங்கள் குடும்பத்தினர் பெயரிலும் பல லட்சங்கள் முதலீடு செய்தனர்.

ஆனால் அவர்கள் கூறியது போல் 45 நாளில் பணத்தை இரட்டிப்பாக கொடுக்கவில்லை. ஏமாற்றப்பட்டவர்கள் தொடர்ந்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்து வருகின்றனர்.

இது தவிர மாவட்டத்தில் சைபர் கிரைம் மோசடிகளும் நடந்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் பேஸ்புக், வாட்ஸ் ஆப், செயலி மூலம் வெளிநாட்டிற்கு அனுப்புதல், ஆன்லைன் லாட்டரியில் பரிசு தொகை பெற்றுத்தருவதாக கூறி ரூ.60 லட்சம் வரை மோசடி செய்துள்ளனர்.

மக்களின் அதீத ஆசையும் அறியாமையும், போதிய விழிப்புணர்வு இல்லாததும் ஏமாற்றத்திற்கு வழிவகுக்கிறது. நிதி, கிரெடிட், டெபிட் கார்டு மோசடி, ஆன்லைன் மோசடி குறித்த விழிப்புணர்வு மக்களிடம் இருக்க வேண்டும்.

அனைவரும் விழிப்புடன் இருந்தாலே ஆன்லைனில் ஏமாற்றி பண மோசடி கும்பலிடம் இருந்து தப்பிக்கலாம் என போலீசார் தெரிவிக்கின்றனர்.

Advertisement