நீர்வரத்து வாய்க்காலில் குவியும் குப்பைகள்

வேப்பூர், செப். 7– பெரிய ஏரியின் நீர் வரத்து வாய்க்காலில் குப்பைகளை கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேப்பூர் ஊராட்சியில், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு, முக்கிய நீர் நிலையாக 40 ஏக்கர் பரப்பளவில் பெரிய ஏரி உள்ளது.

இதில், வேப்பூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பெய்யும் மழைநீர், இரண்டு முக்கிய நீர்வரத்து வாய்க்கால்கள் வழியாக தண்ணீர் வந்தடைகிறது.

இதன்மூலம், 200 ஏக்கர் விளை நிலங்கள் நீர் பாசன வசதி பெறுவதுடன், நிலத்தடி நீர் மட்டம் உயர்கிறது. மேலும், ஏரியையொட்டியுள்ள மூன்று பொது கிணறுகள் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் நீரேற்றி, அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், ஏரிக்கு தண்ணீர் வரும் இரண்டு நீர்வரத்து வாய்க்கால்களில் புதர்கள் மண்டியுள்ளன. இந்நிலையில், திருச்சி மார்க்க சர்வீஸ் சாலையில் வேளாண் கூட்டுறவு வங்கி அருகேயுள்ள வாய்க்காலில் வணிக வளாகங்கள் மற்றும் வீடுகளில், குவியும் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள், இறைச்சிகள் கொட்டப்படுகின்றன.

இதனால், வாய்க்கால் முற்றிலும் மாசடைந்து துர்நாற்றம் வீசுகிறது. மழைக்காலத்தில் இதன் வழியாக செல்லும் தண்ணீர் ஏரிக்கு சென்றால், ஏரி முழுவதும் மாசடைந்து கிராம மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, வேப்பூர் பெரிய ஏரியின் நீர் வரத்து வாய்க்காலை சீரமைத்து குப்பைகள் கொட்டுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement