மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தது

கரூர்:கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு, நேற்று முன்தினம் காலை வினாடிக்கு, 5,332 கன அடி தண்ணீர் வந்தது. அதில், சம்பா சாகுபடிக்கு ஆற்றில் வினாடிக்கு, 2,141 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று மாலை, 4:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து வினாடிக்கு, 5,011 கன அடியாக குறைந்தது.

அதில், டெல்டா மாவட்டங்களில், சம்பா சாகுபடிக்காக காவிரியாற்றில் வினாடிக்கு, 3,525 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. நான்கு பாசன கிளை வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

ஆத்துப்பாளையம் அணை
கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார் வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 0.38 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. கரூர் நகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு சிறிது நேரம் சாரல் மழை பெய்தது.

Advertisement