இடது கையில் காயம் வலது கைக்கு எக்ஸ்ரே டாக்டர் பரிந்துரையால் பரபரப்பு

1

விக்கிரவாண்டி: முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அடிபட்ட இடது கைக்கு பதிலாக வலது கைக்கு எக்ஸ்ரே எடுக்க டாக்டர் பரிந்துரையால் மருத்துவமனையில் ஏற்பட்ட பரபரப்பு சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலானது.

விழுப்புரம், வழுத ரெட்டியைச் சேர்ந்தவர் விஜயகுமார், 42; இவர், நேற்று இடது கையில் அடிபட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கத் தில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்ந்தார்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவருக்கு எக்ஸ்ரே எடுக்க இடது கை என்பதற்கு பதிலாக வலது கை என எழுதிக் கொடுத்துள்ளார். பதற்றத்தில் இருந்த அவரது உறவினர்கள் அவரை எக்ஸ்ரே அறைக்கு அழைத்துச் சென்றார்.

அங்கிருந்த பணியாளர் சீட்டை வாங்கி பார்த்து அதிர்ச்சியடைந்து டாக்டரிடம் திருத்தி வாங்கி வரும்படி அனுப்பினார்.

வெளிப்புற காயம் என்பதால் இந்த விஷயம் எக்ஸ்ரே எடுப்பவருக்கு தெரிந்தது. இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு வைரலாகி வருகிறது.

உயிர் காக்கும் இடத்தில் உள்ள ஒரு சில டாக்டர்கள் அலட்சிய செயல்பாட்டால் ஒட்டு மொத்த மருத்துவமனையின் மீது பொதுமக்கள் அதிருப்தி அடைகின்றனர். எனவே மருத்துவ மனை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து இனி வரும் காலங்களில் இது போன்ற சம்பவம் நடைபெற கூடாது என எதிர்பார்க்கின்றனர்.

Advertisement