பெருமாள் ஏரி நீர் இருப்பு சரிவு

குள்ளஞ்சாவடி: போதிய மழை இல்லாததால் குள்ளஞ்சாவடி பெருமாள் ஏரியின் நீர் இருப்பு குறைந்துள்ளது.

குள்ளஞ்சாவடி அருகே பொதுப்பணித்துறைக்கு சொந்தமான, 3200 ஏக்கர் பரப்பளவில் பெருமாள் ஏரி உள்ளது. கடலுார் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் இந்த ஏரியின், 11 மதகுகள் மூலம் சுற்றியுள்ள கிராமங்களில், 10 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறுகின்றன.

கடந்த தி.மு.க., ஆட்சியில், 112 கோடி ரூபாய் செலவில் ஏரி துார்வாரும் பணிகள் நடந்தன. ஏரியின் மொத்த கொள்ளளவு ஆன 6.5 அடியில் தற்போது நீர் இருப்பு 1.3 அடியாக குறைந்துள்ளது.

இந்தாண்டு கோடை மழை பொய்த்ததால் பெருமாள் ஏரி நீர் இருப்பு சரிந்துள்ளது. குறுவை சாகுபடிக்கு ஏரியில் இருந்து நீர் திறப்பு, தற்போது முடிவடையும் தருவாயில் உள்ளது.

நெய்வேலி சுரங்க நீர், 40 கன அடியாக வரத்து இருந்து வருவதாகவும், கோடை மழை இல்லாததால் ஏரியின் நீர் இருப்பு குறைந்து காணப்படுவதாகவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement