ஷீத்தல் தேவி ஆதிக்கம்: உலக பாரா வில்வித்தையில்

ஆமதாபாத்: உலக பாரா வில்வித்தை தகுதிச் சுற்றில் ஷீத்தல் தேவி அசத்தினார்.
ஆமதாபாத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான உலக வில்வித்தை பாரா சீரிஸ் ('ஸ்டேஜ்-3') நடக்கிறது. இந்தியா, சீனா, இங்கிலாந்து உட்பட 19 நாடுகளில் இருந்து 109 பேர் பங்கேற்கின்றனர்.


தனிநபர் 'காம்பவுண்டு' பிரிவு தகுதிச் சுற்றில், நடப்பு உலக சாம்பியனும், உலகின் 'நம்பர்-1' வீராங்கனையுமான இந்தியாவின் ஷீத்தல் தேவி 19, பங்கேற்றார். பிறக்கும் போதே இரு கைகள் இல்லாத ஷீத்தல், வலது கால், தோளில் 'பேலன்ஸ்' செய்து, வாயினால் அம்பு எய்து இலக்கை துல்லியமாக தாக்கினார். தகுதிச் சுற்றில் 720க்கு 698 புள்ளி எடுத்த ஷீத்தல், 'காம்பவுண்டு' பிரிவில் முதலிடம் பெற்றார். இவருக்கு முதல் சுற்றில் 'பை' வழங்கப்பட்டுள்ளதால், 2வது சுற்றில் சுலோவாகியாவின் லிலியானா லகோவாவை சந்திக்க உள்ளார்.

மற்ற இந்திய வீராங்கனைகளான லால்பதி (தகுதிச் சுற்றில் 11வது இடம்), சரிதா (12வது), பாயல் நாக் (14வது) ஆகியோருக்கும் முதல் சுற்றில் 'பை' வழங்கப்பட்டுள்ளது.

ஆண்களுக்கான தனிநபர் 'காம்பவுண்டு' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் ராகேஷ் குமார், 702 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்தார். மற்ற இந்திய வீரர்களான தோமன் குமார் (696 புள்ளி), குர்விந்தர் சிங் (689) முறையே 4, 8வது இடம் பிடித்து நேரடியாக 2வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

Advertisement