அரையிறுதியில் இலங்கை அணி: வங்கதேச அணி ஏமாற்றம்

துபாய்: ஆசிய கோப்பை லீக் போட்டியில் இலங்கை அணி, வங்கதேசத்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.



துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பெண்கள் ஆசிய கோப்பை, 'டி-20' தொடர் நடக்கிறது. 'பி' பிரிவு லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' இலங்கை (ஐ.சி.சி., ரேங்க் 'நம்பர்-6'), வங்கதேசம் ('நம்பர் - 10') மோதின. 'டாஸ்' வென்ற இலங்கை கேப்டன் சமாரி அத்தபத்து, 'பவுலிங்' தேர்வு செய்தார்.

வங்கதேச அணிக்கு திலாரா அக்தர், ஜூவாரியா பெர்துஸ் நல்ல துவக்கம் தந்தனர். விமுக்தி ஓவரில் (3வது) பெர்துஸ் 'ஹாட்ரிக்' பவுண்டரி அடித்தார். முதல் விக்கெட்டுக்கு 31 ரன் சேர்த்த நிலையில், பெர்துஸ் (14) அவுட்டானார். திலாரா, 26 ரன் எடுத்தார். கேப்டன் நிகார் சுல்தானா (4) ஏமாற்ற, 10 ஓவரில் 52/3 ரன் எடுத்து தவித்தது.

பின் சோபனா மொஸ்தாரி, ஷொர்னா அக்தர் போராடினர். சோபனா அவ்வப்போது பவுண்டரி அடிக்க, ஸ்கோர் சீராக உயர்ந்தது. பிரபோதா பந்தில் சோபனா (34) வெளியேறினார். ஷொர்னா, 9 ரன்னுக்கு நடையை கட்டினார். 'டெயிலெண்டர்'கள் நிலைக்கவில்லை

வங்கதேச அணி 20 ஓவரில் 114/8 ரன் எடுத்தது. இலங்கை சார்பில் பிரபோதா அதிபட்சமாக 3 விக்கெட் வீழ்த்தினார்.


ஹர்ஷிதா அசத்தல்: சவாலான இலக்கை துரத்திய இலங்கை அணிக்கு 'டாப்-ஆர்டர்' பேட்டர்கள் சோபிக்கவில்லை. 17 ஓவரில் 86/6 ரன் எடுத்து தவித்தது. நிலாக் ஷிகா, 18 ரன் எடுத்தார். 17 ஓவரில் 86/6 ரன் எடுத்து தவித்தது. தனிநபராக போராடிய ஹர்ஷிதா சமரவிக்ரமா, ரிது மோனி (18வது) ஓவரில் ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்து, திருப்புமுனை ஏற்படுத்தினார்.

இலங்கை அணி 19.2 ஓவரில் 115/6 ரன் எடுத்து வெற்றி பெற்று, அரையிறுதிக்குள் (லீக் சுற்றில் 3 வெற்றி, 6 புள்ளி) நுழைந்தது. ஹர்ஷிதா (48), கவுஷினி (11) அவுட்டாகாமல் இருந்தனர்.

Advertisement