மாநகராட்சிகளை முன்கூட்டியே கலைக்க த.வெ.க., திட்டமா

- நமது நிருபர் -: தமிழகத்தில் மாநகராட்சிகளை முன்கூட்டியே கலைத்து தனி அதிகாரிகளை (ஸ்பெஷல் ஆபீசர்) நியமிக்க த.வெ.க., அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு சட்டசபை கூட்டத்தொடர் முடிந்தபின் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் கட்சி தொடங்கி 2 ஆண்டுகளில் த.வெ.க., ஆட்சியை பிடித்தது. மெஜாரிட்டி இல்லாததால் காங்., வி.சி.க,, உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஆனால் ஆளுங்கட்சியாக இருந்தும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் த.வெ.க.,வுக்கு பிரதிநிதித்துவம் இல்லை. அங்கெல்லாம் இன்னும் தி.மு.க., ஆட்சி போல் தான் காட்சிகள் நடக்கின்றன. கிராம அளவில் த.வெ.க., செயல்படாமல் திணறி வருகிறது.

ஆட்சியை இழந்துவிட்ட தி.மு.க., உள்ளாட்சி அமைப்புகளில் வலுவாக இருப்பதால்தான் தோல்வியிலும் உத்வேகமாக செயல்பட முடிகிறது. இதன் தாக்கம் தான் சட்டசபையில் எதிரொலிக்கிறது என த.வெ.க., நம்புகிறது.

தி.மு.க.,வுக்கு 'செக்' எனவே இதற்கும் 'செக்' வைக்கும் வகையில் உள்ளாட்சிகள் பதவிக் காலம் வரும் மார்ச் வரை இருந்தாலும் அதற்குள் குறிப்பாக மாநகராட்சிகளை மட்டும் முதற்கட்டமாக கலைத்து விட்டால் தி.மு.க.,வின் பலம் மனரீதியாக குறைந்து விடும். மாநகராட்சிகளில் தனி அதிகாரிகளை நியமித்து அவற்றை த.வெ.க.,வின் முழுக்கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட முடியும் என்பது ஆளுங்கட்சியின் கணக்கு.

அடுத்த 6 மாதங்களுக்கு பின் உள்ளாட்சி தேர்தலை நடத்தி, சட்டசபை தேர்தல் போல், உள்ளாட்சியிலும் வெற்றியை பெற்று விடலாம். அடுத்து நடக்கும் இடைத்தேர்தலிலும் சட்டசபை தேர்தலில் நழுவ விட்ட வெற்றியை மீட்டு விடலாம் என த.வெ.க., திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து த.வெ.க.,வினர் கூறியதாவது:

த.வெ.க.,வின் அடுத்த இலக்கு உள்ளாட்சி தேர்தல் வெற்றி தான். மாநகராட்சி, நகராட்சிகளில் நடந்த ஊழல்களை முன்வைத்து உள்ளாட்சி தேர்தலில் த.வெ.க., களம் இறங்க தயாராகி வருகிறது. தற்போது நகராட்சித் துறை டெண்டர்கள் முறைகேடு புகார் மீது ஆளுங்கட்சி அதிக கவனம் செலுத்துகிறது.

ஊழல் புகார் காரணமாவே மாநகராட்சிகள் கலைக்கப்பட்டன என்ற தேர்தல் வியூகம் த.வெ.க.,வுக்கு கைகொடுக்கும்.

மூத்த அமைச்சர்கள் இதுகுறித்து முதல்வர் விஜயின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். முதல்வர் முடிவு செய்வார் என்றனர்.

Advertisement