கடலடி அகழாய்வு பூம்புகாரில் தொடக்கம்

3

சென்னை: தமிழக தொல்லியல் துறை சார்பில், பூம்புகாரில் கடலடி அகழாய்வை, தொல்லியல் துறை அமைச்சர் ராஜ்மோகன் நேற்று தொடங்கி வைத்து, ஆய்வு செய்தார்.

சங்க கால சோழர்களின் துறைமுக நகரமான பூம்புகாரில், தமிழக தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு தொடங்கி உள்ளது.

சங்க இலக்கியங்களிலும், சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட மணிமேகலை, சிலப்பதிகாரம் உள்ளிட்டவற்றிலும், அதிகம் குறிப்பிடப்பட்ட நகரமான பூம்புகார் குறித்து, வெளிநாட்டவர் குறிப்புகளிலும் இடம் பெற்றுள்ளன.

ஆனாலும், கடல்கோள் எனும், 'சுனாமி'யால் ஏற்கனவே அந்த நகரம் அழிந்ததால், அதை கடலடி அகழாய்வு செய்யும் பணிகளை, மத்திய, மாநில தொல்லியல் துறையினர் ஏற்கனவே சிறிய அளவில் செய்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று முதல், வரும் 23ம் தேதி வரை, கடலடி அகழாய்வு செய்யும் பணியை, தமிழக தொல்லியல் துறை அமைச்சர் ராஜ்மோகன் நேற்று தொடங்கி வைத்தார்.

இது குறித்து, தொல்லி யல் துறை இயக்குநர் ஜெயசீலன் கூறியதாவது:

பூம்புகாரில், தரை மற்றும் கடல் பகுதிகளில், அகழாய்வு பணியை செய்ய உள்ளோம். இதன் வாயிலாக, சங்ககால துறைமுகம் மற்றும் அது சார்ந்த கட்டமைப்புகளின் பரப்பளவை கண்டறிய திட்டமிட்டுள்ளோம்.

மேலும், பழங்காலத்தில் தொலைந்து போன கப்பல் சிதைவுகளைக் கண்டறிவது, கடல் மட்டத்தின் மாறுபாடுகள், ஆறுகளின் போக்கு மாற்றங்களை கண்டறிவதையும் நோக்கமாக கொண்டுள்ளோம்.

இதனால், பழங்கால தமிழர்களின், கடல்சார் வர்த்தக கட்டமைப்பில் இதன் நிலையை வரையறுக்க முடியும்.

இந்த அகழாய்வு, கடற்கரையில் இருந்து, 250 சதுர கிலோமீட்டர் பரப்பளவில், 2 முதல் 60 மீட்டர் ஆழம் வரை, நீச்சல் வீரர்களின் உதவியுடன் நடத்தப்படும்.

ஏற்கனவே, இங்கு மண்பாண்ட துண்டுகள், கடலுக்குள் மூழ்கிய குடியிருப்புகளுக்கான தடயங்கள் கிடைத்துள்ளன. மேலும், நீள்வட்ட வடிவ கட்டமைப்பும் கண்டறியப் பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement