கனிமவள தொழிலை கைப்பற்ற துடிக்கும் புள்ளி!
ஏலக்காய் டீக்கு, 'ஆர்டர்' தந்தபடியே, “திருடனை பிடிச்சு குடுத்தவங்க அதிர்ச்சியாகிட்டாங்க பா...” என, விவாதத்தை ஆரம்பித்தார் அன்வர்பாய்.
“எந்த ஊருலங்க...” என கேட்டார் அந்தோணிசாமி.
“கோவையில் புலியகுளம்னு ஒரு ஏரியா இருக்கு... இங்க, குறிப்பிட்ட ஒரு இடத்துல ஆம்புலன்ஸ்களை வரிசையா நிறுத்தி வச்சிருந்தாங்க... இந்த வண்டிகள்ல இருந்து, தினமும் பேட்டரி திருடு போயிருக்குது பா...
“போலீசாரிடம் சொல்லியும், நடவடிக்கை இல்ல... இதனால, ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களே ராத்திரி ஒளிஞ்சிருந்து, பேட்டரி திருடனை கையும் களவுமா பிடிச்சு, புலியகுளம் போலீஸ் ஸ்டேஷன்ல ஒப்படைச்சாங்க பா...
“போலீசாரும், 'நாங்க பார்த்துக்கிறோம்... நீங்க போங்க'ன்னு சொல்லிட்டு, 'ரோட்டுல சிறுநீர் கழிச்சிட்டு இருந்தவர் சட்டை பையில் இருந்து பணத்தை திருடிட்டு ஓட பார்த்தார்'னு சாதாரண வழக்கை போட்டு, கதையை முடிச்சிட்டாங்க... இதனால, ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் அதிர்ச்சியில இருக்காங்க பா...” என்றார் அன்வர்பாய்.
“தேர்தலுக்கு தயாரா கிட்டாவ வே...” என்றார் பெரியசாமி அண்ணாச்சி.
“இடைத்தேர்தல் தான் இன்னும் அறிவிக்கலையே ஓய்...'' என்றார் குப்பண்ணா.
“நான் சொல்றது, தி.மு.க., உட்கட்சி தேர்தலை... 'இந்த முறை தேர்தல் நடத்தி தான் மாவட்டச் செயலர்களை தேர்வு செய்யணும்'னு, தலைமை கண்டிப்பான உத்தரவு போட்டிருக்குல்லா...
“காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலரா இருக்கிறவர், முன்னாள் அமைச்சர் அன்பரசன்... இவரது மாவட்டத்துல ஸ்ரீபெரும்புதுார், ஆலந்துார்னு ரெண்டு சட்டசபை தொகுதிகள் வருது... இந்த முறை, தனக்கு பதிலா தன் மகன் தமிழ்மாறனை, மாவட்டச் செயலராக்க நினைக்காரு வே...
“அதேநேரம், இப்ப காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் குன்றத்துார் தெற்கு ஒன்றிய தி.மு.க., செயலரா இருக்கிற படப்பை மனோகரனும், மாவட்டச் செயலர் பதவிக்காக களத்துல குதிச்சிருக்காரு... அன்பரசன் அமைச்சரா இருந்தப்ப, அவரது ஆதரவாளரா இருந்த இவரும், பதவி போட்டியில குதிச்சிருக்கிறதால, அன்பரசன் தரப்பு அதிர்ச்சியில இருக்கு வே...” என்றார் பெரியசாமி அண்ணாச்சி.
“கனிமவள தொழிலை கையில எடுக்க பார்க்கறார் ஓய்...” என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
“தமிழக கல் குவாரிகள்ல இருந்து கற்கள், மண் உள்ளிட்ட கனிம வளங்கள் கொள்ளை போறது, திராவிட கட்சிகள் ஆட்சியில அதிகமா நடந்துது... த.வெ.க., ஆட்சிக்கு வந்ததும், இதை கட்டுப்படுத்தியிருக்கா ஓய்...
“ஆனா, பல ஆயிரம் கோடி ரூபாய் புழங்கும் இந்த தொழிலை, கட்டுப்பாட்டில் எடுக்க முயற்சிகள் நடக்கறது... முதல்வருக்கு நெருக்கமான புள்ளி ஒருத்தர், இதுல தீவிரமா இறங்கியிருக்கார் ஓய்...
“ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில், கனிமவள தொழில் பண்ணிண்டு இருக்கற தன் நண்பரை, தமிழகத்துக்கு வரவழைக்க போறார்... அவருக்கு கனிமவளத் துறையில் கவுரவ பதவி கொடுத்து, தமிழகத்தின் மொத்த கனிமவள தொழிலையும் கட்டுப்பாட்டுல எடுக்க திட்டமிட்டிருக்கார் ஓய்...'' என முடித்தார் குப்பண்ணா.
“வாங்க, விஷ்ணு ரெட்டி... உம்ம நண்பர் சுஷீல் ரெட்டி ஊர்ல இருந்து எப்ப வர்றாருங்க...” என நண்பரிடம் அந்தோணிசாமி பேச, மற்றவர்கள் கிளம்பினர்.