பேச்சு, பேட்டி, அறிக்கை

@quote@ பா.ஜ., தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை:

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே கோவில் திருவிழாவிற்கு சென்ற, 16 வயது சிறுமியை, நான்கு பேர் கும்பல், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த செய்தி, நெஞ்சை பதற செய்கிறது. சிங்கப்பெண்கள் சிறப்பு பாதுகாப்பு படை எங்கே, எந்த மூலையில் முடங்கி கிடக்கிறது என தெரியவில்லை. மாற்றம் என்ற பெயரில், மக்களுக்கு தினசரி ஏமாற்றத்தை அளித்து கொண்டிருக்கும் முதல்வர் விஜய், தனது நிர்வாக தோல்வியை ஒப்புக்கொண்டு, மொத்தமாக பதவி விலகி விடலாம்.

பா.ஜ., ஆளும் மாநிலங்களில் எல்லாம், பாலியல் குற்றங்களே நடக்கலையா...? அதுக்காக, அந்த மாநில முதல்வர்கள் யாராவது பதவி விலகியிருக்காங்களா?quote


விஸ்வ ஹிந்து பரிஷத் தேசிய பொதுச்செயலர் மிலிந்த் பராண்டே பேட்டி: தமிழகத்தில், ஏராளமான ஹிந்து கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. சிறுபான்மையினருக்காக, அரசு பல்வேறு நிதிகளை செலவிட்டு வருகிறது. அதுபோல, ஹிந்து கோவில்களில் இருந்து வரும் நிதியை, ஹிந்து சமூகத்தின் நலன், சேவை திட்டங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்; பக்தர்கள் வழங்கிய நிலத்தை, கோவில் சேவைக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

கோவிலுக்கு பக்தர்கள் வழங்கிய பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள், ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியிருக்கின்றனவே... அவற்றை மீட்டாலே, அறநிலையத் துறைக்கு கோடிகளில் வருமானம் கிடைக்கும்!

பார்வர்டு பிளாக் கட்சி தமிழக பொதுச்செயலர் கதிரவன் பேட்டி:

நீதிமன்றத்தின் பல தீர்ப்புகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை. உதாரணமாக, காவிரி விவ காரத்தை கூறலாம்.

'தமிழகத்துக்கு காவிரி நீர் திறப்பது தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை, கர்நாடக அரசு மதிப்பதில்லை; நீங்கலாவது காங்., ராகுலிடம் சொல்லி தீர்வு காண்ற வழியைப் பாருங்க' என, முதல்வர் விஜயிடம் நேரில் சொல்லலாமே?


இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து அறிக்கை: கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலையில் உள்ள, 172 கிராமங்களில், தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து, விவசாயம் செய்து வரும் பழங்குடியின மக்களின் நில உரிமையை உறுதி செய்வது, தமிழக அரசின் முக்கியமான கடமை.

பல ஆண்டுகளாக, அந்த மலையில் வாழும் பழங்குடியின மக்களுக்கு வருவாய்த் துறை வாயிலாக, முறையான நிலப்பட்டா வழங்க வேண்டும்.

பழங்குடி இன மக்களுக்கான நிரந்தர மேம்பாட்டுக்கு, எந்த அரசு வந்தாலும், தீர்வே கிடைக்க மாட்டேங்குதே?

Advertisement