அரசு பஸ்சுக்குள் மழை: குடை பிடித்த பயணிகள் கேள்விக்குறியாகும் பராமரிப்பு

நத்தம்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் முதல் கோட்டையூர் சென்ற அரசு பஸ்சுக்குள் மழைநீர் ஒழுகியது. இதனால் அவதியடைந்த பயணிகள், குடை பிடித்தபடி பயணித்தனர்.

நத்தம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு மழை பெய்தது. அப்போது நத்தத்தில் இருந்து கோட்டையூரூக்கு 40 பயணிகளுடன் அரசு பஸ் சென்றது. அதில் கூரை சேதமடைந்திருந்த நிலையில், பஸ்சுக்குள் மழைநீர் ஒழுகியது.

இதனால் சில பயணிகள் மழைநீரில் நனைந்தனர். கைக்குழந்தைகளுடன் வந்த பெண்கள், முதியவர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

தொடர்ந்து அதிகளவில் மழைநீர் ஒழுகியதால், சிலர் பஸ்சுக்குள்ளேயே குடை பிடித்தபடி பயணித்தனர்.

அரசு பஸ்களின் கூரை, ஜன்னல்கள் உள்ளிட்ட பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர். மேலும் மழைநீர் உட்புகாத வகையில் பஸ்சில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் வலியுறுத்தினர்.

Advertisement