தெரு நாய்கள் கடித்து 20 ஆடுகள் பலி

நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம் அணைப்பட்டியில் தெரு நாய்கள் கடித்ததில் கொட்டகையில் இருந்த 20 ஆட்டுக்குட்டிகள் பலியாகின.

நிலக்கோட்டை தாலுகா அணைப்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா 70.

இவரது தோட்டத்தில் மதுரை மன்னாடிமங்கலத்தை சேர்ந்த அம்மாவாசி 32, ஆட்டு கொட்டகை அமைத்தார். அங்கு 20 செம்மறி ஆட்டுக்குட்டிகளை அடைத்து வைத்திருந்தார்.

அப்போது தோட்டத்தில் சுற்றிய தெரு நாய்கள், கொட்டகைக்குள் புகுந்து ஆட்டுக்குட்டிகளை கடித்துக் குதறின. இதில் 20 ஆட்டுக்குட்டிகளும் உயிரிழந்தன.

இதுகுறித்து விளாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நிலக்கோட்டை தாசில்தார் ராமசாமி சம்பவ இடத்தை பார்வையிட்டார்.

பின் அம்மாவாசிக்கு இழப்பீடாக ரூ.2 லட்சம் கிடைப்பதற்கு பரிந்துரை செய்தார்.

பேரூராட்சி, நகர் பகுதிகளில் பிடிக்கப்படும் தெரு நாய்கள் அணைப்பட்டியில் விடப்படுவதாக குற்றம்சாட்டிய கிராம மக்கள், இதனால் தான் தெரு நாய்கள் கூட்டம் அதிகரித்ததாக தெரிவித்தனர்.

Advertisement