பஸ் ஸ்டாண்ட் டீக்கடைக்குள் திடீர் தீ

குன்னூர்: குன்னூர் பஸ் ஸ்டாண்ட்டில் உள்ள டீக்கடைக்குள் திடீர் தீயால் பரபரப்பு ஏற்பட்டது.

குன்னூர் பஸ் ஸ்டாண்டில் பிரபாகர் என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். நேற்று மாலை 4:15 மணியளவில் கடையில் வியாபாரம் மும்முரமாக நடந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக காஸ் சிலிண்டர் ரெகுலேட்டர் பகுதியில் திடீரென தீப்பற்றியது. தீ மளமளவென பரவ தொடங்கியதை கண்டதும், அப்பகுதியில் இருந்த டிரைவர்கள் ஓடி வந்து தீயணைப்பு துறையினரிடம் தெரிவித்தனர். மக்கள் மற்றும் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் தீயை அணைத்தனர். உள்ளே இருந்த காஸ் சிலிண்டர்களை தீயணைப்பு துறையினர் பாதுகாப்பாக வெளியே எடுத்து வந்தனர்.

மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடத்தில், தீ பரவுவதை உடனடியாக தடுத்ததால் பெரிய அசம்பாவிதங்கள் தடுக்கப்பட்டது. காஸ் விநியோகஸ்தர்கள் கூறுகையில், ' இதுபோன்று தீப் பிடிப்பதற்கு முக்கிய காரணம் ரப்பர் குழாய்கள் பாதுகாப்பு இல்லாமல் இருப்பதும், நெருப்பு எண்ணெய், பிளாஸ்டிக் உள்ளிட்டவைகளை சிலிண்டர்கள் மேலே வைத்திருப்பதும், தீப்பொறி சிறிது பட்டவுடன் இவற்றில் தீ பிடிக்கிறது. இது போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க மக்களிடையே விழிப் புணர்வு அவசியம்', ' என்றனர்.

Advertisement