இரு வாரங்களாக போக்கு காட்டும் ஆட்கொல்லி புலி தேடும் பணியில் வனத்துறை தீவிரம்

கூடலூர்: கூடலூர், லாரஸ்டன் பகுதியில், இருவரை தாக்கிக் கொன்ற புலியை தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டம், கூடலூர் லாரஸ்டன் பகுதியில், 2 பேரை தாக்கி கொன்ற புலியை, பிடிக்கும் பணியில் கடந்த, 21ம் தேதி முதல் வனத்துறையினர் நவீன கேமராக்கள் உதவியுடன் தேடி வருகின்றனர். இரு வாரங்களாக போக்கு காட்டி வந்த புலி, 2 நாட்களுக்குப் முன், மாலை லாஸ்டன் கோக்கால் மலையில் டிரோன் கேமராவில் தென்பட்டது. கால்நடை டாக்டர்கள் மற்றும் வன ஊழியர்கள், டிரோன் கேமரா உதவியுடன் அதனை பின் தொடர்ந்து மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், புலி யாருக்கும் தென்படாத வகையில் முட்புதர்களில் நகர்ந்து சென்றது. கடும் மேகமூட்டம் ஏற்பட்டதால், மாலை 6:30 மணிக்கு இப்பணி கைவிடப்பட்டது.

இப்பணியில் கும்கி யானைகள் மீது அம்பாரி கட்டி, அதன் மீது கால்நடை டாக்டர்கள் சென்று மயக்க ஊசி செலுத்த முயற்சியை மேற்கொண்டனர்.

இரவு, 11:00 மணி வரை டிரோனில் தென்பட்ட புலி அடர்ந்த பகுதிக்குள் சென்று மறைந்தது. புலியின் இருப்பிடம் தெரியாது நிலையில் நேற்று, லாரஸ்டன், நடுவட்டம், ஆத்தூர், காந்திநகர், பாரம் பகுதிகளில் புலியை தேடும் பணியை வனத்துறையினர் தீவிரப்படுத்தினர்.

வனத்துறையினர் கூறுகையில், 'லாரஸ்டன் பகுதியில் மயக்க ஊசி செலுத்தி புலியை பிடிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. முட்புதர்கள் வழியாக சென்று, இடம் மாறி சென்று விட்டது. அதன் இருப்பிடத்தை அறிய தேடுதல் பணியை தீவிரப்படுத்தியுள்ளோம். மக்கள் புலியை பிடிக்கும் வரை தனியாக வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.' என்றனர்.

Advertisement