பாலம் அமைக்கும் பணிகள் தாமதம் மக்கள், மாணவர்கள் தவிப்பு

கிணத்துக்கடவு: கி ணத்துக்கடவு, முத்துக்கவுண்டனூர் பாலம் அமைக்கும் பணிகள் தாமதமாவதால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கிணத்துக்கடவு, சொக்கனூர் ஊராட்சி முத்துக்கவுண்டனூர் முதல் பாலர்பதி செல்லும் ரோடு, 4 கி,மீ., தூரம் உள்ளது. இதில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் பாலம் கட்டும் பணிகள் துவங்கி, ஐந்து மாதங்களுக்கும் மேலாகிவிட்டது.

இதனால், இந்த ரோடு தற்காலிகமாக அடைக்கப்பட்டு, அதற்கு பதில் முத்துக்கவுண்டனூர் முருகன் கோவில், பெரும்பதி பிரிவு வழியாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த, 3 மாதங்களாக பணிகள் மந்தமாக நடப்பதால், அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

மேலும், விவசாயிகள் பள்ளி மாணவர்கள் ரோட்டில் சென்று வர சிரமம் ஏற்படுகிறது. எனவே, பாலம் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்துகின்றனர்.

மக்கள் கூறியதாவது:

நெடுஞ்சாலை துறை சார்பில் பாலம் அமைக்கும் பணிகள் முதல் மூன்று மாதத்தில், 75 சதவீதம் முடிந்தது. மீதமுள்ள பணிகள் முடிய கால தாமதம் ஏற்படுகிறது. இதனால், 300 மீட்டர் தூரம் செல்லும் பகுதிக்கு, 4 கி,மீ., தூரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், முத்துமலை முருகன் கோவில் வழியாக அனைத்து வாகனங்களும் செல்கிறது. இந்த குறுகலான ரோட்டில் டிப்பர் லாரி முதல் பைக் வரை செல்வதால், பள்ளி மாணவர்கள் உரிய நேரத்திற்கு பள்ளி செல்ல காலதாமதம் ஏற்படுகிறது.

விவசாயிகள் விளை பொருட்கள் எடுத்துச் செல்லவும் சிரமம் ஏற்படுகிறது. எனவே, மீதமுள்ள பாலம் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

இவ்வாறு, கூறினர்.

Advertisement