தோட்டக்கலை பயிர்களில் அன்னிய முதலீடு; விதிகளை தளர்த்த மத்திய அரசு பரிசீலனை

புதுடில்லி: வாழை உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்களில் அன்னிய நேரடி முதலீடுகளை அதிகரிக்கும் பொருட்டு, விதிகளை தளர்த்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து, வர்த்தக அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாவது:

தற்போதைய விதிகளின்படி, தேயிலை, காபி, ரப்பர், ஏலக்காய், பனை மற்றும் ஆலிவ் எண்ணெய் உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்களில் மட்டுமே தானியங்கி முறையில், 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி வழங்கப்படுகிறது. வாழை உள்ளடக்கிய தோட்டக்கலை பயிர்களில் கூ டுதல் வெளிநாட்டு முதலீடுகளை அனுமதிப்பது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருகிறோம்.

கடந்த 2000 ஏப்., முதல் 2026 மார்ச் வரை, தேயிலை மற்றும் காபி துறையில் 2,789 கோடி ரூபாயும், ரப்பர் துறையில் 37,138 கோடி ரூபாயும் அன்னிய முதலீடுகள் வந்துள்ளன.

அந்த வகையில் வாழையிலும் அன்னிய முதலீட்டை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆண்டிற்கு 3 கோடி டன்னுக்கு மேல் வாழை உற்பத்தி செய்து, உலக அளவிலான மொத்த வாழை உற்பத்தியில் 26 சதவீத பங்களிப்பை நம் நாடு கொண்டிருக்கிறது. இருப்பினும், ஏற்றுமதி சந்தையில் வெறும் 1 சதவீதம் மட்டுமே பங்களிக்கிறது.

கடந்த 2024 - 25ம் நிதியாண்டில், 3,567 கோடி ரூபாய் மதிப்பில் வாழை ஏற்றுமதியாகியுள்ளது. வரும் ஆண்டுகளில் இந்த ஏற்றுமதியை 9,500 கோடி ரூபாயாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தெரிவித்து உள்ளார்.

Advertisement