நிலக்கரி வாயுவாக்கல் திட்டம்: ஆர்வம் காட்டாத நிறுவனங்கள்

புதுடில்லி: மத்திய அரசின், 37,500 கோடி ரூபாய் மதிப்பிலான நிலக்கரி வாயுவாக்கல் திட்டத்தில் பங்குபெற எந்த ஒரு நிறுவனமும் ஆர்வம் காட்டவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிலக்கரி வாயுவாக்கல் திட்டங்களை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு 37,500 கோடி ரூபாய் மதிப்பிலான ஊக்கத்தொகை திட்டத்தை அறிவித்திருந்தது. இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும்.

ஆனால், இதுவரை எந்தவொரு தனியார் அல்லது பொதுத்துறை நிறுவனமும் விண்ணப்பிக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. 7.50 கோடி டன் நிலக்கரியை எரிவாயுவாக மாற்றும் மத்திய அரசின் இலக்குக்கு இது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

எனினும், விண்ணப்ப பதிவு முற்றிலும் ஆன்லைனில் நடைபெறுவதால், காலக்கெடு முடிந்த பின்னே சரியான எண்ணிக்கை தெரியவரும் என நிலக்கரி அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. மேலும், விரிவான திட்ட அறிக்கைகளை தயாரிக்க நிறுவனங்களுக்கு அதிக நேரம் தேவைப்படும் என்பதால், தொழில்துறையினர் பங்கேற்க ஏதுவாக இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை விண்ணப்பங்கள் பெறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துாய்மையான எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்கவும், எல்.என்.ஜி., யூரியா, மெத்தனால் போன்ற பொருட்களுக்காக வெளிநாடுகளை சார்ந்திருப்பதை தவிர்க்கவுமே இத்திட்டம் கொண்டுவரப்பட்டது.

கடந்த நிதியாண்டில் மட்டும் இவற்றின் இறக்குமதிக்காக கிட்டத்தட்ட 2.77 லட்சம் கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. உலகளாவிய போர் பதற்றங்களுக்கு மத்தியில், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க அரசு இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளது.

Advertisement