சிமென்ட் ஆலையால் காற்று மாசு; கலெக்டரிடம் கிராம மக்கள் மனு

1

கோவை: மதுக்கரை பகுதியில் செயல்படும் சிமென்ட் ஆலையில் இருந்து வெளியேறும் துகள்களால், காற்று மாசு ஏற்படுவதை தடுக்க கோரி, குரும்பபாளையம் பகுதி மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

மனு விவரம்:

90 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் சிமென்ட் ஆலையை சமீபத்தில் அதானி நிறுவனம் வாங்கியுள்ளது. ஆலையில் இருந்து வெளியேறும் சிமென்ட் பொடியை கட்டுப்படுத்த கவனம் செலுத்துவதில்லை.

இதனால் ஆலையை ஒட்டியுள்ள எங்கள் கிராமம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. வீடுகள், சாலைகள் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தினமும் சிமென்ட் பொடி படிந்து வருகிறது.

உணவு பாத்திரங்கள், குடிநீர் மற்றும் துணிகளை கூட திறந்தவெளியில் வைக்க முடியாத நிலை உள்ளது. சிமென்ட் பொடியால் பயிர்கள் முழுவதும் மூடப்படுவதால் விளைபொருட்களை சந்தைப்படுத்த முடியவில்லை. கால்நடைகளுக்கும் உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன.

ஆலையில் இருந்து வெளியேறும் மாசை கட்டுப்படுத்தி, வாழ்வாதாரத்தையும், சுகாதாரத்தையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement