மோசமான பாதையில் சிரமப்படும் மண்ணின் மைந்தர்கள்: நோயால் பாதிக்கப்பட்டவர்களை தொட்டில் கட்டி துாக்கும் அவலம்,

பந்தலுார்: பந்லுார் அருகே குடநிலம் பழங்குடியினர் கிராமத்திற்கு சாலை வசதி இல்லாத நிலையில், கட்டுமான பொருட்களை சுமந்து செல்வதில் கூட பெண்கள் மிகவும் சிரமப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

பந்தலுார் அருகே எருமாடு புளிங்குன்னு பகுதியை ஒட்டி கொடநிலம் பழங்குடியின கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் பணியர் சமுதாயத்தைச் சேர்ந்த, 11 பழங்குடியின குடும்பத்தினர் குடியிருந்து வருகின்றனர். கிராமத்திற்கு செல்ல தனியார் தோட்டம் வழியாக மண் சாலையும், தொடர்ந்து சிறிய நடைபாதையும் உள்ளது.

நடைபாதையின் மையப்பகுதியில் பெரிய பாறைகள் உள்ள நிலையில், மண் சாலையிலிருந்து, கிராமத்திற்கு செல்வதற்கு வனத்துறைக்கு சொந்தமான நிலத்தில், ஒற்றையடி நடைபாதை அமைந்துள்ளது.

இந்த நிலத்தை பழங்குடியினர் அல்லாதவர் பயன்படுத்தி வருவதாகவும், இவ்வழியாக சாலை அமைக்க வனத்துறை அனுமதித்த போதும், ஆக்கிரமிப்பாளரின் மிரட்டலால் சாலை அமைக்க முடியாமல் உள்ளது. ' இங்கு அதிகாரிகள் ஆய்வு செய்து பழங்குடியின கிராமத்திற்கு செல்ல சாலை வசதி ஏற்படுத்தவும் வலியுறுத்தி தர வேண்டும்,' என, கொட்டமங்கலம் சிறப்பு ஆதிவாசி கிராம சபை சார்பில், மாவட்ட கலெக்டருக்கு மனு வழங்கப்பட்டது.

எனினும், இதுவரை தீர்வு காணப்படாத நிலையில், தற்போது இங்கு பழங்குடியின மக்களுக்கு அரசு தொகுப்பு வீடுகள் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், கட்டுமான பொருட்களை சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மற்றும் பழங்குடியின மக்கள் தலை சுமையாக எடுத்து செல்ல வேண்டிய அவல நிலை தொடர்கிறது. மேலும், நோயால் பாதிக்கப்பட்டவர்களை தொட்டில் கட்டி, 200 மீட்டர் துாரம் தூக்கி வர வேண்டிய நிலையில் ஏற்பட்டுள்ளது.

பழங்குடிகள் கூறுகையில், 'மண்ணின் மைந்தர்கள் என்று கூறப்படும் எங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்தி தர, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement