ரோட்டில் திரிந்த மாடுகளால்  விபத்தில் சிக்கி பலி

சிவகங்கை:சிவகங்கையில் ரோட்டில் திரியும் மாடுகளால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

சிவகங்கை மாவட்ட தலைநகரில் 27 வார்டுகள் உள்ளது. மாவட்டத்தின் தலைமை அலுவலகங்கள், மருத்துவக் கல்லுாரி, தேசிய வங்கிகள் உள்ளிட்ட பிற அலுவலகங்கள் இங்கு உள்ளது. நகர் மதுரை - தொண்டி தேசிய நெடுஞ்சாலையும், மானாமதுரை - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையும் 4 பகுதியாக பிரிக்கிறது. சிவகங்கை நகராட்சியாக இருந்தாலும் சிலர் நகருக்குள் கிராம பகுதி போல் வீட்டில் வைத்து மாடு, ஆடு, குதிரைகளை வளர்த்து வருகின்றனர்.

அவற்றை ரோட்டில் அலைய விடுகின்றனர். சிவகங்கை நகராட்சி மேம்பால சர்வீஸ் ரோடு, பஸ் ஸ்டாண்ட், அரண்மனை பகுதி, மஜித்ரோடு, கல்லுாரி சாலை, காளவாசல் பகுதியில் மாடுகள் இரவு நேரத்தில் ரோட்டின் மையப்பகுதியில் கூட்டமாக படுத்துள்ளது.தேசிய நெடுஞ்சாலையில் டூவீலரில் வருபவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட மேலுார் ரோட்டில் கடை வியாபாரி ஒருவர் மாட்டின் மீது மோதி உயிரிழந்தார். நகரில் அடிக்கடி இரவு நேரத்தில் ரோட்டில் திரியும் ஆடு மாடுகளால் டூவீலரில் செல்வோர் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் சூழல் உள்ளது. நேற்று கல்லுாரி சாலையில் திரிந்த ஒரு மாட்டின் மீது அந்த வழியாக சென்ற வாகனம் மோதியதில் விபத்தாகி மாடு உயிரிழந்துள்ளது. நகரில் ஆடு மாடுகள் வளர்ப்போர் தங்களின் செல்ல பிராணிகளை வீட்டில் வைத்து வளர்க்க முன்வரவேண்டும். அதேபோல் மாவட்ட நிர்வாகம் கட்டுபாடின்றி ரோட்டில் திரியும் மாடுகளை பறிமுதல் செய்து உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement