பெருந்துறை தொகுதியில் அ.தி.மு.க., வெற்றியை எதிர்த்த வழக்கு நிராகரிப்பு

சென்னை: ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதியில், அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயகுமாரின் வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்கை நிராகரித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டசபை தேர்தலில், பெருந்துறை தொகுதியில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட ஜெயகுமார், 9,693 ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றார். பின், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்துவிட்டு, த.வெ.க.,வில் இணைந்தார்.

இதனிடையே, இந்த தொகுதியில் தி.மு.க., சார்பில் போட்டியிட்ட தோப்பு வெங்கடாசலம், ஜெயகுமாரின் வெற்றியை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கை நிராகரிக்க கோரி, ஜெயகுமார் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி, இந்த வழக்கில், சட்டப்படி அனுமதிக்கப்பட்ட எந்த காரணங்களும் இல்லை என்று கூறி, தேர்தல் வழக்கை நிராகரித்து உத்தரவிட்டார்.

தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ளதால், பெருந்துறை தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்க, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இடைக்கால தடை விதித்திருப்பதும், தோப்பு வெங்கடாசலம், சமீபத்தில் தி.மு.க.,வில் இருந்து விலகி விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement