மத்திய அமைச்சருக்கு எதிரான விசாரணைக்கு கர்நாடகா ஐகோர்ட் இடைக்கால தடை

9


பெங்களூரு: தேர்தல் பத்திரம் வாங்க மிரட்டப்பட்டதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் உள்ளிட்டோர் மீது பெங்களூரு போலீசார் விசாரணைக்கு கர்நாடகா உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.


கர்நாடகா மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர், ஜனாதிகார சங்கர்ஷ பரிஷத் அமைப்பைச் சேர்ந்த ஆதர்ஷ் அய்யர், 50; ஏப்ரல் 15ல் பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:

தேர்தல் பத்திரம் வாங்கி பா.ஜ.,வுக்கு நன்கொடை அளிக்க வேண்டும் என்று பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி, நிர்வாக இயக்குனரை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அமலாக்க துறையினர், பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, டில்லி பா.ஜ., அலுவலக ஊழியர்கள், கர்நாடக பா.ஜ., முன்னாள் தலைவர் நளின்குமார் கட்டீல், உள்ளிட்டோர் மிரட்டி உள்ளனர்.

பணம் தராவிட்டால் அமலாக்கத் துறை வாயிலாக, 'ரெய்டு' நடத்துவோம் என்று கூறி, ரூ. 8,000 கோடி தேர்தல் பத்திரம் வாங்க வைத்து உள்ளனர். இது குறித்து, பெங்களூரு திலக்நகர் போலீஸ் நிலையத்தில் மார்ச் 30ம் தேதி புகார் செய்தேன். பெங்களூரு தென்கிழக்கு மண்டல டி.சி.பி.,யிடம் ஏப்., 2ல் புகார் அளித்தேன். என் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மிரட்டி பணம் பறித்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்த போலீசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு புகாரில் கூறப்பட்டு இருந்தது.

புகார் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி, நீதிபதி கே.என்.சிவகுமார், திலக்நகர் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதன்படி, போலீசார் பெங்களூரு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

போலீஸ் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க கோரி மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்றம் போலீஸ் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து அடுத்த விசாரணையை அக்.22ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

Advertisement