பாகிஸ்தான் பெண் உட்பட நால்வர் கர்நாடகாவில் கைது

தாவணகெரே, கர்நாடக மாநிலம், தாவணகெரேவில் பாகிஸ்தானை சேர்ந்த ஒரு பெண் உட்பட நால்வர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

கர்நாடகாவின் பெங்களூரில் அதிக எண்ணிக்கையில், வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் முறைகேடாக தங்கி உள்ளனர் என்ற புகார்கள் சமீபத்தில் எழுந்தன.

'அவர்களை கண்டறிந்து, சொந்த நாட்டுக்கு அனுப்பி வைப்போம்' என, மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில், பெங்களூரின் ஜிகனி பகுதியில் பதுங்கி இருந்த பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ரஷீத் சித்திக், வங்கதேசத்தை சேர்ந்த அவரது மனைவி ஆயிஷா, மாமனார் ஹனீப், மாமியார் ரூபினா ஆகிய நால்வரை, பெங்களூரு போலீசார் இரண்டு நாட்களுக்கு முன் கைது செய்தனர்.

விசாரணையில், அவர்கள் போலி ஆதார் அட்டை பயன்படுத்தி இங்கு வசித்து வந்தது உறுதி செய்யப்பட்டது. இந்த சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர்களிடம் நடத்திய விசாரணையில், தங்கள் உறவினர்கள் தாவணகெரேவில் பதுங்கி இருப்பதாக தெரிவித்தனர்.

இதன் அடிப்படையில், தாவணகெரே நகரின் சிவகுமார சுவாமி லே அவுட்டில், பெங்களூரு போலீசார் நேற்று சோதனை நடத்தினர்.

அப்போது, அங்கு தங்கியிருந்த பாகிஸ்தான் பெண் பாத்திமா, 50, என்பவர் கைது செய்யப்பட்டார். இவர், தாவணகெரேவை சேர்ந்த அல்தாப் என்பவரை திருமணம் செய்து, பல ஆண்டுகளாக இங்கு வசித்தது தெரியவந்தது.

இவர்களது மகன் சித்திக் முகமது யாசீன், மருமகள் ஜெய்நாபி நுார் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களை பெங்களூருக்கு அழைத்து வந்து, ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement