ஐ.நா., பொதுச்செயலருக்கு இஸ்ரேலில் நுழைய தடை

டெல் அவிவ், ஐ.நா., பொதுச்செயலர் ஆன்டனியோ குட்டரெஸ், தங்கள் நாட்டிற்குள் நுழைய இஸ்ரேல் அரசு தடை விதித்துள்ளது.

மேற்காசியாவில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஐ.நா., பொதுச்செயலர் ஆன்டனியோ குட்டரெஸ், இஸ்ரேல் நாட்டிற்கு செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால், தங்கள் நாட்டிற்குள் அவர் உள்ளே நுழைய இஸ்ரேல் அரசு தடை விதித்துள்ளது.

இதுகுறித்து சமூக வலைதளத்தில் இஸ்ரேலின் வெளியுறவுத்துறை அமைச்சர் காட்ஸ் கூறியதாவது:

ஐ.நா., பொதுச்செயலராக உள்ள ஆன்டனியோ குட்டரெஸ், ஆளுமை இல்லாத நபராக உள்ளார். எங்கள் நாட்டின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை உலக நாடுகள் கண்டித்தன; ஆனால், ஐ.நா., அமைப்பு ஒன்றும் கூறவில்லை.

எனவே, மவுனம் காக்கும் யாருக்கும் எங்கள் மண்ணில் காலடி எடுத்து வைக்கும் தகுதிஇல்லை.

அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தியது உட்பட பல அட்டூழியங்களை மேற்கொண்ட ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஹவுதி போன்றவற்றை பயங்கரவாத அமைப்புகளாக அறிவிக்கவில்லை.

அவர்களை ஆதரிக்கும் குட்டரெஸ், ஐ.நா., வரலாற்றில் ஒரு கறையாக எப்போதும் நினைவு கொள்ளப்படுவார்.

இவ்வாறு கூறினார்.

டிரம்ப் கிண்டல்

''ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதல் என்பது, பள்ளி முன் இரண்டு குழந்தைகள் சண்டையிடுவது போல் உள்ளது,'' என, அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “இஸ்ரேல் மீது ஈரான் ஒருபோதும் தாக்குதல் நிகழ்த்தியிருக்கக் கூடாது. இதேநிலை நீடித்தால், மூன்றாம் உலகப்போர் அரங்கேறும் சூழல் உள்ளது. நான், அமெரிக்க அதிபராக இருந்தபோது மத்திய கிழக்கில் இதுபோன்ற போர் நிகழவில்லை. ஈரான், எங்களின் முழு கட்டுப்பாட்டில் இருந்தது,'' என்றார்.

Advertisement