கோடி ரூபாயில் நடக்கும் திட்ட பணி ஆலந்துார் தொகுதியில் விறுவிறு

ஆலந்துார், ஆலந்துார் சட்டசபை தொகுதிக்கு, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் எனும் சி.எம்.டி.ஏ., சார்பில், இந்த நிதியாண்டில், சில திட்டப் பணிகள் அறிவிக்கப்பட்டன.

அதன்படி, கோவூர் குளத்தை 4.50 கோடி ரூபாயிலும், அய்யப்பன்தாங்கல் பேருந்து நிலையத்தை, 10 கோடி ரூபாயிலும் மேம்படுத்தப்படுகிறது.

ஆதம்பாக்கம், பாலகிருஷ்ணா நகரில், 5.65 கோடி ரூபாயில் புதிய சமுதாய நலக்கூடம் அமைக்கப்படுகிறது. ஆதம்பாக்கம் ஏரி, 10 கோடி ரூபாயில் மேம்படுத்தப்படுகிறது.

இவற்றை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், அறநிலையத்துறை அமைச்சரும், சி.எம்.டி.ஏ., தலைவருமான சேகர்பாபு, நேற்று பார்வையிட்டனர்.

ஆலந்துார் புதுத்தெருவில், 15 கோடி ரூபாயில் கட்டப்பட்டு வரும் புதிய சமுதாய நலக் கூட பணியை விரைந்து முடிக்க, அறிவுரை வழங்கினர்.

சமூக நலக்கூடம், தரைத்தளம், மூன்று தளங்களுடன் அமைகிறது. அரங்கில் ஒரே நேரத்தில், 620 பேர் அமரலாம். ஒரு பந்தியில் , 250 பேர் உணவருந்த முடியும்.

தவிர 25 கார்கள், 57 இருசக்கர வாகனங்கள் நிறுத்த, 'பார்க்கிங்' வசதி, மண்டபம் முழுதும் 'ஏசி' மற்றும் இரு மின்துாக்கிகளுடன் பணிகள் நடக்கின்றன. அடுத்த ஆண்டு மார்ச் மாதம், இக்கூடம் திறக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement