காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா விமரிசையாக துவக்கம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், நடப்பாண்டிற்கான நவராத்திரி மஹோத்ஸவத்தையொட்டி, காமாட்சி அம்மனுக்கு விசேஷ அபிஷேக அலங்காரமும், நவாவர்ண பூஜை, கன்யா பூஜை மற்றும் ஸுவாஸினி பூஜை உள்ளிட்டவையும் நடந்தது.

இரவு 8:00 மணிக்கு, நவராத்திரி மண்டபத்தில் காமாட்சியம்மன் விசேஷ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து சூரசம்ஹார நிகழ்ச்சியும், தீபாராதனையும் மற்றும் பிரபல சங்கீத வித்வான்கள் பங்கேற்ற சங்கீத கச்சேரியும் நடந்தது.

காமாட்சியம்மனுக்கு முக்கிய நாட்களில் நவராத்திரி வைபவத்தில் லட்சார்ச்சனை மற்றும் சதுர்வேத பாராயணம், சண்டி ஸப்தசதி பாராயணமும் நடைபெறுகிறது.

நவராத்திரி உற்சவத்தின் எட்டாம் நாளான அக்., 10ம் தேதி இரவு, துர்காஷ்டமி, துர்க்கை புறப்பாடு, சூரசம்ஹாரம் பூர்த்தியும், 11ம் தேதி இரவு சரஸ்வதி பூஜையும், 12ம் தேதி இரவு விஜயதசமி, நவாவர்ணம் பூர்த்தியும், 13ம் தேதி இரவு ஸஹஸ்ர கலஸ ஸ்தாபனமும்,நவராத்திரி உற்சவம் நிறைவு நாளான அக்., 14ம் தேதி காலை ஸஹஸ்ர கலசாபிஷேகமும், இரவு ஊஞ்சல் புஷ்ப கைங்கர்யமும் நடைபெறுகிறது.

நவராத்திரி உற்சவத்தையொட்டி தினமும் இரவு 7:30 மணிக்கு, காஞ்சிபுரம் காமாக்ஷி அம்பாள் சாரதா நவராத்திரி கலை நிகழ்ச்சிகள் டிரஸ்ட் சார்பில், காமாட்சியம்மன் கோவிலில் உள்ள நவராத்திரி மண்டபத்தில், பிரபல சங்கீத வித்வான்கள் பங்கேற்கும் இன்னிசை மற்றும் இதர கலைநிகழ்ச்சி நடைபெறுகிறது.

விழாவிற்கான ஏற்பாட்டை கோவில் உதவி ஆணையர் ஸ்ரீனிவாசன், ஆதீன பரம்பரை தர்மாகர்ததாவின் ஸ்ரீகார்யம் சுந்தரேச அய்யர், மணியகாரர் சூரியநாராயணன், காமக்ஷி அம்பாள் தேவஸ்தான ஆதீன பரம்பரை ஸ்தலத்தார், ஸ்தானீகர்கள் இணைந்து செய்துள்ளனர்.

Advertisement