பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது

பரங்கிப்பேட்டை : பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.5,000 லஞ்சம் வாங்கிய பெண் சர்வேயரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

கடலுார் அடுத்த சின்னகாரைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர், பரங்கிப்பேட்டை அடுத்த பெரியப்பட்டு தச்சன்பாளையம் கிராமத்தில் உள்ள தனது விவசாய நிலத்தை, உட்பிரிவு செய்து பட்டா பெயர் மாற்றம் செய்ய ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தார்.

மனுவை பரிசீலித்த, பரங்கிப்பேட்டை குறுவட்ட சர்வேயர் நிர்மலா, வெங்கடேசனிடம் ரூ.5,000 லஞ்சம் கேட்டார். இதுகுறித்து வெங்கடேசன், கடலுார் லஞ்சம் ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

அதனையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனைப்படி ரசாயன பவுடர் தடவிய ரூ.5000 பணத்தை, நேற்று மாலை 3:30 மணிக்கு, பெரியப்பட்டு வி.ஏ.ஓ., அலுவலகத்தில் இருந்த சர்வேயர் நிர்மலாவிடம் கொடுத்தார். லஞ்ச பணத்தை வாங்கிய சர்வேயர் நிர்மலாவை, அங்கு மறைந்திருந்த டி.எஸ்.பி., சத்தியராஜ், இன்ஸ்பெக்டர்கள் சுந்தரராஜன், திருவேங்கடம் மற்றும் போலீசார், கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

இச்சம்பவம் வருவாய் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement