ஜாம்ஷெட்பூர் 3வது வெற்றி: ஐ.எஸ்.எல்., கால்பந்தில்

ஜாம்ஷெட்பூர்: ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில் ஜாம்ஷெட்பூர் அணி 2-0 என, ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி 3வது வெற்றியை பதிவு செய்தது.

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 11வது சீசன் நடக்கிறது. ஜாம்ஷெட்பூரில் நடந்த லீக் போட்டியில் ஈஸ்ட் பெங்கால், ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதின. ஆட்டத்தின் 21வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் ரெய் தச்சிகாவா ஒரு கோல் அடித்தார். இதற்கு ஈஸ்ட் பெங்கால் அணியினரால் பதிலடி கொடுக்க முடியவில்லை. முதல் பாதி முடிவில் ஜாம்ஷெட்பூர் அணி 1-0 என முன்னிலையில் இருந்தது.

இரண்டாவது பாதியின் 70வது நிமிடத்தில் ஈஸ்ட் பெங்கால் வீரர் லால் சுங்னுங்கா 'சேம்சைடு' கோல் அடித்து ஏமாற்றினார். தொடர்ந்து போராடிய ஈஸ்ட் பெங்கால் அணியினரால் பதிலடி கொடுக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் ஜாம்ஷெட்பூர் அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதுவரை விளையாடிய 4 போட்டியில், 3 வெற்றி, ஒரு தோல்வி என 9 புள்ளிகளுடன் ஜாம்ஷெட்பூர் அணி 3வது இடத்தில் உள்ளது. நான்கு போட்டியிலும் தோல்வியை தழுவிய ஈஸ்ட் பெங்கால் அணி, கடைசி இடமான 13வது இடத்தில் நீடிக்கிறது.


மோகன் பகான் அசத்தல்
கோல்கட்டாவில் நடந்த மற்றொரு லீக் போட்டியில் மோகன் பகான், முகமதன் அணிகள் மோதின. அபாரமாக ஆடிய மோகன் பகான் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மோகன் பகான் அணி இதுவரை விளையாடிய 4 போட்டியில், 2 வெற்றி, ஒரு 'டிரா', ஒரு தோல்வி என 7 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது.

Advertisement