இந்திரா காந்தி மைதானத்தில் புற்கள் நடவு பணி தீவிரம்

புதுச்சேரி: இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் கால்பந்து மைதானத்திற்கு புற்கள் நடவு பணி துவக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி உப்பளத்தில் கடந்த 1992ம் ஆண்டு இந்திரா காந்தி விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டது. இங்கு 400 மீட்டர் சுற்றளவுள்ள ஓடு பாதை, புல்வெளி மைதானம், வீரர்கள் தங்குமிடம், பார்வையாளர்கள் அமர கேலரி ஆகியவை அமைக்கப்பட்டன. இத்துடன் கால்பந்து, நீளம் மற்றும் உயரம் தாண்டுதல், ஹாக்கி, கையுந்து பந்து, கைப்பந்து மைதானங்களும் உருவாக்கப்பட்டன.

இதனால் வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி பதக்கங்களை குவித்தனர். தொடர்ந்து, தேசிய போட்டிகளிலும் பங்கேற்று சாதித்தனர். காலப்போக்கில் முறையான பராமரிப்பு இல்லாததால் மைதானத்தில் உள்ள ஓடுபாதை, கால்பந்து மைதானம் உள்ளிட்டவை சேதமடைந்தது.

இதனிடையே கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரியில் புதுச்சேரி வந்த பிரதமர் நரேந்திர மோடி இந்திரா காந்தி அரங்கில் கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் ரூ. 7 கோடி செலவில் 400 மீட்டர் சிந்தடிக் ட்ராக் அமைக்க அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து மேம்பாட்டு பணிகள் நடந்து வந்தன. சுற்றிலும் தடகளத்திற்கான சிந்தடிக் ட்ராக் போடப்பட்டுள்ள சூழ்நிலையில் தற்போது கால்பந்து மைதானத்திற்கு புற்கள் அமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, விளையாட்டு துறை அதிகாரிகள் கூறுகையில், 'மழைகாலத்தினை எதிர்பார்த்து மைதானத்தில் புற்கள் நடும் பணி துவக்கப்பட்டுள்ளது. அடுத்த மூன்று மாதத்தில் புற்கள் நிறைந்த மைதானமாக உருவாகிவிடும். எனவே டிசம்பர் மாதத்திற்குள் விளையாட்டிற்கு தயாராகி விடும்' என்றனர்.

Advertisement