வி.காட்டுப்பாளையம் அரசு பள்ளி மாணவிகள் கால்பந்தில் அசத்தல்

நடுவீரப்பட்டு:நடுவீரப்பட்டு அடுத்த வி.காட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி கால்பந்து மாணவிகள் அணி மாவட்ட அளவில் நடக்கும் போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த பள்ளியில் படிக்கும் மாணவிகள் 17 மற்றும் 19 வயதிற்குட்டபட்டவர்களுக்கான வட்ட அளவில் நடந்த கால்பந்து போட்டியில் வெற்றி பெற்று, நெய்வேலியில் வரும் 23ம் தேதி நடக்கும் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளாக இப்பள்ளியில் படிக்கும் மாணவிகள் கால்பந்து போட்டியில் விளையாடி பல வெற்றிகளை பெற்று வருகின்றனர்.

இந்த மாணவிகள் பிளஸ் 2 முடித்து, கல்லுாரிகளில் படிக்க விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டில் ஆண்டுதோறும் 10 மாணவிகள் சேர்ந்து படித்து வருகின்றனர்.

மாவட்ட அளவில் நடக்கும் கால்பந்து போட்டியில் கலந்து கொள்ள உள்ள மாணவிகள் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் மகேஷ்குமார் ஆகியோரை தலைமை ஆசிரியர் வடிவேல், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் காசிலிங்கம், ஊராட்சி தலைவர் சிவராமன் பாராட்டினர்.

Advertisement