லாவோஸ் சென்றார் பிரதமர்; மோடிக்கு உற்சாக வரவேற்பு

2

புதுடில்லி: ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக 2 நாள் பயணமாக, பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார். தலைநகர் வியன்டியனில், அந்நாட்டு உள்துறை அமைச்சகம் சிறப்பான வரவேற்பு அளித்தது.


ஆசியான் - இந்தியா அமைப்பின் 21வது உச்சி மாநாடு நாளை லாவோஸ் தலைநகர் வியன்டியனில் நடைபெற இருக்கிறது. அதோடு, கிழக்கு ஆசியா அமைப்பின் 19வது உச்சி மாநாடும் நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக 2 நாள் பயணமாக பிரதமர் மோடி, லாவோஸ் புறப்பட்டு சென்றார்.


இந்த சுற்றுப்பயணம் குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரதமர் சோனக்சய் சிபன்டோன் விடுத்த அழைப்பின் பேரில், ஆசியான் - இந்தியா அமைப்பின் 21வது உச்சி மாநாடு மற்றும் ஆசியா அமைப்பின் 19வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, வியன்டியன் செல்கிறேன்.


இந்தியா தனது கிழக்கு சார்ந்த கொள்கையின் 10ம் ஆண்டை இந்த ஆண்டு கொண்டாடுகிறது. ஆசியான் தலைவர்களுடன் இணைந்து, எதிர்கால திட்டங்கள் மற்றும் இலக்குகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளேன்.


இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு உள்ளிட்டவற்றில் நிலவும் சவால்களை முறியடிப்பதற்கான வாய்ப்புகள் கிழக்கு ஆசிய மாநாட்டின் மூலம் உருவாகும், எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement