பாட்மின்டன்: லக்சயா அதிர்ச்சி தோல்வி

வன்ட்டா: ஆர்க்டிக் ஓபன் பாட்மின்டன் 2வது சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், கிரண் ஜார்ஜ், மாளவிகா உள்ளிட்டோர் தோல்வியடைந்தனர்.

பின்லாந்தில், ஆர்க்டிக் ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், சீனதைபேயின் டியன் சென் சோ மோதினர். முதல் செட்டை 21-19 எனக் கைப்பற்றிய லக்சயா சென், 2வது செட்டை 18-21 என இழந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் மீண்டும் ஏமாற்றிய இவர், 15-21 எனக் கோட்டைவிட்டார். ஒரு மணி நேரம், 10 நிமிடம் நீடித்த போட்டியில் லக்சயா சென் 21-19, 18-21, 15-21 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ் 17-21, 8-21 என இந்தோனேஷியாவின் ஜோனாதன் கிறிஸ்டியிடம் வீழ்ந்தார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் மாளவிகா பன்சோத் 15-21, 8-21 என தாய்லாந்தின் ரட்சனோக் இன்டனனிடம் தோல்வியடைந்தார். மற்ற போட்டிகளில் இந்தியாவின் உன்னாதி ஹூடா, ஆகர்ஷி காஷ்யப் தோல்வியை தழுவினர்.

Advertisement