பரந்துார் ஏர்போர்ட் திட்டத்தில் மறுகுடியமர்வு செய்ய... கணக்கெடுப்பு!:இடம் பெயரும் 1,005 குடும்பத்தினரிடம் விபரம் சேகரிப்பு

காஞ்சிபுரம்:பரந்துார் விமான நிலைய திட்டத்தில், மறு குடிமயர்வு செய்ய, இடம் பெயர தேர்வு செய்யப்பட்ட 5 கிராமங்களில், 1,005 குடும்பத்தினரிடம், வேலை, கல்வி, படிப்பு உள்ளிட்ட விபரங்களை கணக்கெடுக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

சென்னையின் இரண்டாவது விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்துார் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 20 கிராமங்களில், 5,746 ஏக்கரில் அமைய உள்ளது.

இதில், 3,774 ஏக்கர் பட்டா நிலமும், 1,972 ஏக்கர் அரசு நிலமாக உள்ளது. தனியார் பட்டா நிலங்களை கையகபடுத்தும் பணிகளை, வருவாய் துறையினர் தற்போது தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அதேசமயம், ஏகனாபுரம் கிராமத்தில், பல வகையில் தங்கள் போராட்டங்களை தொடர்ந்து 810 நாட்களாக மேற்கொண்டு வருகின்றனர்.

கிராம மக்களின் எதிர்ப்புகள் தொடரும் அதேசமயம், விமான நிலைய திட்டத்தால் பாதிக்கப்படும் கிராம மக்களை மறு குடியமர்வு செய்வதற்கு தேவையான கணக்கெடுப்பு பணிகளும் துவங்கி நடைபெறுகின்றன.

விமான நிலையம் அமைய உள்ள 20 கிராமங்களில், நாகப்பட்டு, நெல்வாய், தண்டலம், ஏகனாபுரம், மகாதேவிமங்கலம் ஆகிய 5 கிராமங்களில் உள்ள 1,005 வீடுகள், விமான நிலைய எல்லைக்குள் வருவதால், இவர்களை மறு குடியமர்வு செய்ய வேண்டியுள்ளது. மற்ற 15 கிராமங்களில் நிலங்கள் மட்டும் கையகப்படுத்தப்பட உள்ளன.

வீடுகள் கையகபடுத்த உள்ள கிராம மக்களிடம், வருவாய் துறையினர் அவர்களின் அடிப்படை விபரங்களை தற்போது கணக்கெடுக்கின்றனர். அவர்களின் படிப்பு, ஜாதி, வயது, கல்வி, சொத்து விபரம், வேலை என அனைத்து வகையான விபரங்களையும் வருவாய் துறையினர் கணக்கெடுக்கின்றனர்.

மறு குடியமர்வு செய்யப்போகும் 1,005 குடும்பங்களில் உள்ள முதியோர், இளைஞர்கள், பெற்றோர், குழந்தைகள் என அனைவரின் விபரங்களை தொகுத்து, மாவட்ட நிர்வாகம், அரசுக்கு அறிக்கையாக அளிப்பர். விமான நிலைய திட்டத்திற்காக காலி செய்ய உள்ள இந்த, 1,005 குடும்பங்களுக்கு மாற்று இடங்களை வழங்க, சிறுவள்ளூர், மடப்புரம், மதுரமங்கலம், மகாதேவிமங்கலம் ஆகிய நான்கு கிராமங்களில், 238 ஏக்கர் நில எடுப்பு செய்யப்படுகிறது.

இந்த 4 கிராமங்களிலும், 1,005 குடும்பங்களுக்கு தேவையான இடம், வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு, வாழ்வாதாரத்துக்கு தேவையான அனைத்து வசதிகளையும் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

இடம் பெயர உள்ள 1,005 வீடுகளில், 635 வீடுகள், ஏகனாபுரம் கிராமத்திலேயே உள்ளது. கிராமத்தில் உள்ள பெரும்பாலான வீடுகள் இடம் பெயர வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதன் காரணத்தாலேயே ஏகனாபுரம் கிராமத்தினர் தொடர்ந்து, 810 நாட்களாக போராடி வருகின்றனர்.

இதுகுறித்து வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

மறு குடியமர்வு செய்ய உள்ள வீடுகளில் வசிப்போருக்கு, 3 சென்ட் நிலம் அல்லது 5 சென்ட் நிலம் அரசு வழங்கும். இதுமட்டுமல்லாமல் வேலை, உதவித்தொகை போன்றவைகளும் வழங்கப்படும்.

மேலும், இழப்பீடு தொகையாக ஒரு பெரும் தொகையும் வழங்கப்படலாம். இதுமட்டுமல்லாமல், மேலும் பல வசதிகளை செய்து கொடுக்க திட்டமிட்டுள்னர்.

மறு குடியமர்வு செய்யபோகும் இடத்தில், சாலை, குடிநீர், தபால் அலுவலகம், ஊராட்சி அலுவலகம், சமுதாய கூடம், பள்ளி, அங்கன்வாடி, கழிப்பறை, பேருந்து சேவை, ரேஷன் கடை, கால்நடை மருந்தகம், மருத்துவமனை என அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்படும் என, அரசாணையிலேயே தெளிவாக கூறப்பட்டுள்ளது.

இதுசம்பந்தமான முடிவுகளை உயர்மட்ட குழு எடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.




மறு குடியமர்வு செய்ய உள்ள வீடுகள் எண்ணிக்கை விபரம்



கிராமம் வீடுகள் எண்ணிக்கை

நாகப்பட்டு 73

நெல்வாய் 178

தண்டலம் 45

ஏகனாபுரம் 635

மகாதேவிமங்கலம் 74

மொத்தம் 1,005



நாகப்பட்டு வீடுகளில் இன்று கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்



கடந்த அக்.,7ம் தேதி, நாகப்பட்டு கிராம மக்களின் நிலங்களை, பரந்துார் விமான நிலைய நில எடுப்பு அலுவலர்கள் அளக்க சென்ற போது, அதே பகுதியைச் சேர்ந்த கிராமத்தினர், வருவாய் துறையினரை முற்றுகையிட்டு, எதிர்ப்பு தெரிவித்தனர்.அதை தொடர்ந்து, விவசாயிகளின் அனுமதி இல்லாமல் நிலம், வீடு கையகப்படுத்தும் நடவடிக்கை நிறுத்த வேண்டும்.

விவசாயிகளின் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், இன்று காலை, அனைவரின் வீடுகளின் முன் கருப்பு கொடி ஏற்ற உள்ளதாக அறிவித்துள்ளனர்.

Advertisement