பொன்முடி மீதான குவாரி வழக்கு பிப்.14ம் தேதிக்கு ஒத்திவைப்பு

விழுப்புரம்,:அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு பிப்., 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், வானுார் தாலுகா பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில், அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்து அரசுக்கு ரூ.28.36 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி உள்ளிட்ட 8 பேர் மீது 2012ல், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இவ்வழக்கு விசாரணையில், மொத்தமுள்ள 67 சாட்சிகளில் 51 பேர் விசாரிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 30 பேர் பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர்.

நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயச்சந்திரன், கோதகுமார், கோபிநாதன், சதானந்தம் ஆஜராகினர். அமைச்சர் பொன்முடி, கவுதமசிகாமணி, ராஜமகேந்திரன் ஆஜராகவில்லை. அரசு தரப்பு சாட்சிகளும் ஆஜராகவில்லை.

அப்போது, அரசு தரப்பு வழக்கறிஞர், இவ்வழக்கில் மேலும் சில சாட்சிகளை விசாரித்து, கூடுதல் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கோரி மனு தாக்கல் செய்தார். அதனையேற்ற நீதிபதி மணிமொழி, விசாரணையை பிப்., 14ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Advertisement