சித்த மருத்துவ கண்காட்சியில் இலவச மருத்துவ பரிசோதனை
சென்னை, ஆயுஷ் அமைச்சகத்தின் மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமம் சார்பில், எட்டாவது சித்த தினத்தையொட்டி, சென்னை, கோட்டூர்புரம், பி.எம்.பிர்லா கோளரங்க வளாகத்தில், மாபெரும் சித்த மருத்துவ கண்காட்சி துவங்கியுள்ளது.
வரும் 9ம் தேதி வரை நடக்கும் இக்கண்காட்சியில், காலை 10:00 முதல் 6:00 வரை, பொதுமக்கள் இலவசமாக பங்கேற்கலாம்.
இந்த கண்காட்சியில், பொதுமக்களுக்கு இலவச சித்த மருத்துவ பரிசோதனை மற்றும் மருந்துகளும் வழங்கப்படுகின்றன.
மேலும், சித்த மருத்துவத்தில் உள்ள நன்மைகள், மூலிகை செடிகள், உணவு வகைகள் உள்ளிட்டவை, பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமம் வெளியிட்ட அறிவிப்பு:
சித்த மருத்துவம், உணவே மருந்து என்ற அடிப்படையில் வழங்கப்படுகிறது. வீடுகளில் உள்ள சுக்கு, இஞ்சி, மிளகு, சீரகம், வெந்தயம், கிராம்பு, ஏலக்காய், பூண்டு, மஞ்சள் ஆகியவற்றை, பல்வேறு நோய்களுக்கு தீர்வாக பயன்படுத்த முடியும்.
அவற்றை எந்த உப பொருளுடன் பயன்படுத்த வேண்டும்; எப்படி பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட விழிப்புணர்வு, இக்கண்காட்சியில் அளிக்கப்படுகிறது.
மேலும், வீடுகளிலேயே வளர்க்கக்கூடிய மூலிகை செடிகள், அதன் பயன்பாடு விளக்கப்படுவதுடன், இலவச சித்த மருத்துவ பரிசோதனையும் செய்யப்படுகிறது. எனவே, கண்காட்சியில் பங்கேற்போர் நிச்சயம் பயன்பெறுவர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.