பள்ளம் தோண்டி ஓராண்டாச்சு! சீரமைப்பு பணிகள் எப்போது? பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம்
வாலாஜாபாத்:வாலாஜாபாத் பேரூராட்சியில் உள்ள 12வது வார்டில், பஜார் சந்து அடுத்து பி.கே., செட்டித்தெரு உள்ளது. இத்தெருவின் இருபுறமும் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கால்வாய் வழியாக வெளியேறக்கூடிய கழிவுநீர், வாலாஜாபாத் பாலாற்றில் இருந்து, முனிசிப் நாராயணசாமி தெரு வழியாக வெள்ளப்பாக்கம் ஏரிக்கு செல்லும் கால்வாயில் கலக்க வேண்டும்.
கடந்த சில மாதங்களாக கால்வாய் பராமரிக்கப்படாததால், அடைப்புகள் ஏற்பட்டு, ஆங்காங்கே கழிவுநீர் தேங்கியுள்ளது. கடந்தாண்டு செட்டித் தெருவில் உள்ள சக்தி மிகுந்த சாலை வினாயகர் கோவில் எதிரே, தரைப்பாலம் வாயிலாக கழிவுநீர் வெளியேறாமல் சாலையில் வழிந்தோடியது.
அப்போது, கால்வாயை சீரமைப்பதற்காக, ஓராண்டுக்கு முன் சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்டது. இதையடுத்து, தற்போது வரை பணியும் மேற்கொள்ளாமல், பள்ளமும் மூடப்படாமல் ஆபத்தான நிலையில் உள்ளது.
இதனால், இச்சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. குறிப்பாக, இரவு நேரங்களில், பஜார் வீதியில் இருந்து வரும் இருசக்கர வாகன ஓட்டிகள், பள்ளம் இருப்பது தெரியாமல் நிலை தடுமாறி விபத்தில் சிக்கி வருகின்றனர்.
எனவே, வாலாஜாபாத், பி.கே., செட்டித் தெருவில் ஓராண்டாக மூடப்படாமல் உள்ள பள்ளத்தை சீரமைக்க, பேரூராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.