விவேகானந்தர் பேசிய இடத்தில் மலரஞ்சலி
பரமக்குடி : பரமக்குடியில் சுவாமி விவேகானந்தர் வருகை தந்த நாளான நேற்று(பிப்.1)அவர் உரையாற்றிய இடத்தில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
பரமக்குடியில் தற்போதைய நகராட்சி அலுவலகம் அருகில் வைகை ஆறு குமரன் படித்துறை பகுதிக்கு சுவாமி விவேகானந்தர் 1897 பிப்.1ல் வருகை புரிந்தார். வீரத் துறவியாக வாழ்ந்த சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் சிகாகோ மாநாட்டில் ஆன்மிக எழுச்சி உரையாற்றிய பின் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வந்தார்.
அப்போது பிப்.1ல் ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடி வந்து மக்கள்மத்தியில் ஆன்மிக எழுச்சி உரையாற்றினார். அதன் நினைவாக நேற்று காலை 8:00 மணிக்கு நகராட்சி முன்புள்ள நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
ஸ்ரீ ராமகிருஷ்ண ஞான வழிபாடு மன்றம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைவர் நாராயணன் தலைமை வகித்தார். செயலாளர் முருகன், நிர்வாகி கோபி முன்னிலை வகித்தனர். விழாவில் அனுமார் கோதண்டராமசாமி கோயில் அறங்காவலர் குழு தலைவர் இளையராஜா மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.