த.வெ.க., கொண்டாட்டத்தால் போரூர் சுங்கச்சாவடியில் நெரிசல்

போரூர்,:நடிகர் விஜயின் கட்சியான த.வெ.க.,வில், அண்மையில் மாவட்ட அளவிலான பொறுப்புகள் அறிவிக்கப்பட்டன.

அதில், மதுரவாயல் மற்றும் அம்பத்துார் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளை சேர்த்து, சென்னை கிழக்கு மாவட்ட த.வெ.க., செயலராக பாலமுருகன் என்பவர் நியமனம் செய்யப்பட்டார்.

இவருக்கு, மதுரவாயல் மற்றும் அம்பத்துார் தொகுதி த.வெ.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சார்பில், நேற்று மாலை வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

போரூர் சுங்கச்சாவடி அருகே த.வெ.க.,வினர், கிரேன் வாயிலாக, 15 அடி அளவில் பிரமாண்ட மாலை அணிவித்தும், பொக்லைன் வாயிலாக மலர்களைத் துாவியம் பாலமுருகனை வரவேற்றனர்.

இந்த கொண்டாட்டம், தாம்பரம் -- மதுரவாயல் சாலையின் நடுவில் நடந்ததால், போரூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனால், 2 கி.மீ., துாரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

சாலையின் நடுவே குவிந்த த.வெ.க., தொண்டர்களை அப்புறப்படுத்தும் பணியில், போக்குவரத்து போலீசார் மற்றும் மதுரவாயல் போலீசார் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, ஆம்புலன்ஸ் ஒன்று போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தது. நீண்ட நேர போராட்டத்திற்கு பின், போலீசார் ஆம்புலன்சுக்கு வழி ஒதுக்கி அனுப்பி வைத்தனர்.

Advertisement